Thursday, November 22, 2018

திகிலூட்டும் அடர்ந்த முந்திரி காடு .......
ஆங்காங்கே சிதறி கிடக்கும் நூற்றுக்கணக்கான லிங்க மூர்த்தங்கள் ....
கண்ணுக்கெட்டும் தூரம் வரை மனித சஞ்சாரம் கிடையாது ...
சற்றே அமானுஷ்யத்துடன் கூடிய ஒரு ஆன்மீக பயணத்திற்கு நீங்கள் தயாரா?

அன்பர்களே.....!

வாருங்கள் .....புறப்படுங்கள் ஒரு குழுவாக.....விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பாண்டிச்சேரி அருகில் உள்ள பூத்துறை கிராமத்திற்கு .(மணவெளி என்றும் சிலர் கூறுகின்றனர் )

எங்குள்ளது....?

திண்டிவனம் --பாண்டி சாலையில் புகழ் பெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் திருக்கோயில் அடுத்து வரும் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு(பூத்துறை) நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் முந்திரி காட்டினுள் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம் ..

ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் உதவியாக உள்ளனர்....சோலையப்பன் என்பவரது அலைபேசி எண் தந்துள்ளேன் 

சொந்த வாகனங்களில் செல்பவராக இருந்தால் பூத்துறை கிராமம்  ஹாரிசான் பேக்ஸ் என்கிற தனியார் நிறுவனம் அடுத்து வரும் தெருவின் வழியே சென்று அங்குள்ள ஒரு அம்மன் கோயில் தாண்டியவுடன் வலதுபுறம் வரும் சற்றே  உள்ளடங்கிய ஒரு முந்திரி காட்டினுள் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட பெருமான்களை நீங்கள்  வணங்கி மகிழலாம் ....பூஜை பொருட்களை கண்டிப்பாக கூட்டு ரோட்டில் வாங்கி கையில் வைத்திருக்க வேண்டும் ..

இப்பகுதியில் வசிக்கும் மக்களே இத்தலத்தை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை ....

நூற்றுக்கணக்கான இந்த லிங்க திருமேனிகள் இங்கு வந்தது எப்படி? யார் பிரதிஷ்டை செய்தனர் ...தல வரலாறு ..? என எதையும் அறிய முடியவில்லை ...இத்திருக்கோயிலில் 63 நாயன்மார்களும் லிங்க திருமேனியராகவே காட்சியளிக்கின்றனர் ....அம்மனும் லிங்க உருவில் தான் அருள்கிறாள் ...

அருகே, செல்லும் வழியில் உள்ள திருச்சிற்றம்பலம் கைலாயநாதர் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு பொலிவுடன் திகழ்கிறது ...தரிசனம் செய்ய மறவாதீர்கள் ...

அதேபோன்று கிடைத்தற்கரிய இத்தலத்தையும் பக்தர்கள் வழிபட ஏதுவாக புனரமைக்கப்பட வேண்டும் ..

பெயர்ப்பலகை இல்லாதமையால் முதற்முறை வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .இக்குறையையும் நீக்கவேண்டும் ....

அருகே தேவார பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைய உள்ளன .....
கிளியனூர் , ஒழித்தியாப்பட்டு ,இரும்பை மாகாளம் போன்றவை அவற்றுள் சில ...

அன்பர்களே .....

இத்திருத்தலத்தை வெளிச்சத்திற்கு , வெளிஉலகிற்கு கொண்டு வரும் பொறுப்பு நம் கையில் தான் உள்ளது....

நீங்கள்சென்றுதரிசித்து மறவாமல் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் 

ஆட்டோ ஓட்டுநர் 
திரு சோலையப்பன் 9597660851











Wednesday, November 14, 2018

நாடி செல்லுங்கள் நலிவடைந்த திருக்கோயில்களை .......
அன்பர்களே .....ஏன் ? என்ன காரணம்?

 நீங்கள் தேடி சென்று மணிக்கணக்கில் வரிசையில் நின்று , உண்டியலில் செலுத்தும் பணம் அந்த திருக்கோயில் வளர்ச்சிக்கோ , அங்கு பணிபுரியும் அர்ச்சகர்கள் வறுமையை போக்கவோ 

பயன் படுத்தப்படுவதில்லை ....மாறாக அவை கோடியில் புரள்பவர்களின் கைகளுக்கு தான்  செல்கிறது.

இறைவனுக்கு மாற்று வஸ்திரம் கூட இல்லாத திருக்கோயில்கள்      இங்கு பல உள்ளன .


 மின்சார கட்டணம் செலுத்த இயலாத இருளில் மூழ்கி கிடைக்கும் திருக்கோயில்கள் பல .


 திருப்பணி நிறைவேற்றப்படாததால் அழிவின் பிடியில் சிக்கியிருக்கும் திருக்கோயில்களோ  பலப்பல .


 ஏழை அர்ச்சகர்களுக்கு மாத வருமானமாக ரூ 150/- கூட வழங்க வக்கில்லாத பல ஆண்டுகள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கா உங்கள் உண்டியல் பணம்?


பக்தர்கள் வருகையின்மையால் பெரும்பாலும் பூட்டியே கிடைக்கும் பாடல் பெற்ற   பல திருத்தலங்கள் காப்பாற்றப்படுவதற்கு ஏன் உங்கள் உழைப்பு பயன்படக்கூடாது ?


வாருங்கள் ....அப்படி ஒரு பாடல் பெற்ற திருத்தலத்தின் நிலையை காணலாம் ...


திருப்பெரும்புலியூர் .....

அன்றலர்ந்த பூக்களை பறிக்க வசதியாக புலிக்கால் கேட்டு பல ஆண்டுகள் தவமிருந்து பெற்ற புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்ர பாதர் , ஆதிசேஷனின் அவதாரமான 
பதஞ்சலி முனிவர் மற்றும் தேவாதி தேவர்கள் பலராலும்,மூவராலும்  வணங்கி வழிபட பெற்ற திருத்தலம் இது ...

இங்கு அமைந்துள்ள சௌந்தர்யநாயகி சமேத வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் மேற்கூறிய அவலங்களுக்கு முற்றிலும் பொருந்தும்.   


அன்பர்களே .....இத்தலத்தின் பெருமையை ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலும் விவரிக்க முடியாது ..


இன்றைய காலகட்டத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் இத்திருக்கோயில் சிறந்த பரிகாரமாகும் ....கருவறையில் ஒளி பொருந்திய திருமேனியராய் கருணையே உருவானவராய் வீற்றிருக்கும் இறைவனை காணும்போது நம் துன்பங்கள் விலகி ஓடிவிட்டதை நம் அனுபவத்தில் உணரலாம் 




பக்தர்கள் வருகையின்மையால்  , குன்றிலிட்ட விளக்கு போல் பிரகாசிக்க வேண்டிய இத்திருக்கோயில் குடத்திலிட்ட விளக்கு போல் சோபையின்றி வருமானமின்றி வெறிச்சோடி இருக்கிறது ....

அருகில் உள்ளவர் திருக்கோயிலை திறந்து காட்டி தரிசனம் செய்ய உதவுகிறார்கள் ....


இருப்பிடம் :  இத்திருக்கோயில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திருநெய்த்தானம் எனப்படும் தேவார பாடல் பெற்ற தலத்திற்கு அருகில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் பாதையில் அமைந்துள்ளது ...


நாம் செய்ய வேண்டியது என்ன?


அன்பர்களே மாதம் ஒருமுறையாவது இத்தகைய பெறற்கரிய திருக்கோயில்களை குடும்பத்துடன் சென்று வழிபடுங்கள்....


நம் குழந்தைகளுக்கு, இளைய தலைமுறையினருக்கு புராண வரலாறுகளை அவர்கள் அறியுமாறு எடுத்து கூறுங்கள் ...


நீங்கள் சென்று வருவதோடு நின்று விடாமல் பலரும் அறிந்து கொள்ளுமாறு அதனை பகிர்ந்து கொள்ளுங்கள் ....


தற்போது தான் முகநூல் , whatsapp என்று ஏராளமாக இருக்கின்றனவே .....அவற்றை உபயோகமாக நாம் பயன்படுத்துவோம் . பழத்திருக்கோயில்களை போற்றுவோம் ..பராமரிப்போம் ..












Friday, October 26, 2018

சிவன் கோவிலா? இங்கா? இல்லவே இல்லையே......!

அரிச்சந்திரபுரம் .....! ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில். அன்னை ஸ்ரீ சௌந்தர்யவல்லி .குடந்தையிலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் சாலையில் சோழன்மாளிகை என்ற இடத்திற்கு முன்னதாவே வரும் ...தேவார வைப்பு தலங்கள் வரிசையில் வரும் தலங்களுள் இதுவும் ஒன்று.  (அப்பரின் திருவீழிமிழலை திருக்கோயில் பதிகத்தில் வருகிறது)

ஆனால் அந்தோ பரிதாபம் ..! இத்தலத்தின் பெயரை சொல்லி கேட்டாலும் , சிவன் கோயில் என்று கேட்டாலும் இறைவன் திருப்பெயரான ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் என்று கேட்டாலும் ,அப்படி ஒரு 
திருக்கோயில் இங்கு இல்லவே இல்லை என்று சாதிக்கிறார்கள் அருகில் உள்ள மக்கள் ...

அன்பர்களே .....இது எவ்வளவு  அவல நிலை ? அருகில் உள்ள இறைவனை ஆராதியுங்கள் ! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே குடியிருப்பார்கள் ?

திருக்கோயில் ,திருப்பணி செம்மல் ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி சுப்ரமண்யம் அவர்கள் ஆசியோடு ஆன்மீக அன்பர்கள் பலரது பெருமுயற்சியால் திருப்பணி நிறைவேற்றப்பட்டு  தூய்மையுடன் அழகான சூழலில் அமைதியாக விளங்குகிறது ...

முன்னர், இத்திருக்கோயிலின் சிலைகள் முழுதுமாக திருடப்பட்டு பராமரிப்பின்றி இறைவன் மட்டுமே தனித்து விடப்பட்டார். பல்லாண்டுகளுக்குப்பிறகு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டாலும் திருக்கோயில் பெரும்பாலும் மூடியே உள்ளது பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ காலங்கள் நீங்கலாக ...

அன்பர்களே ...குறைந்தபட்ஷம் தேவார பாடல் பெற்ற தலங்களையாவது பகல் 12 மணி வரை திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ....இல்லையேல் அரும்பாடு பட்டு திருப்பணி செய்த பலன் கிடைக்காமல் போய்விடும் ....

நாங்கள் சென்ற போதும் திருக்கோயில் பூட்டியே இருந்தது ...பட்டீஸ்வரத்தில் உள்ள குருக்கள் வீடு சென்று அழைத்தோம் ..கனிவுடன் வந்து எங்களுக்கு தரிசனம் செய்ய உதவினார் .....அவருக்கு மிக்க நன்றி ..

பெயர் பலகை ஒன்று அவசியம் வைக்கப்பட வேண்டும் .

கருவறையில் கருணையே வடிவாக குடியிருக்கும் இறைவனை காணும்போது நம் மனதில் ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை .....

அன்பர்களே .....அனைவரும் சென்று தரிசியுங்கள் 
பக்தர்கள் வருகையின்மையால் தான் பெரும்பாலான திருக்கோயில்கள் பூட்டியே உள்ளன ...ஜன சந்தடி மிகுந்த நகரத்தில் உள்ள திருக்கோயில்களை மட்டுமே தரிசிப்பதை சற்று குறைத்து கிராமங்களில் உள்ள இத்தகைய திருக்கோயில்களையும் தரிசனம் செய்யுங்கள் ..

இவ்விடங்களில்  மட்டுமே இறைவன் விஸ்ராந்தியாக ,நம் குறைகளை களைவதற்கு ஏதுவாக வீற்றிருக்கிறார் .





Tuesday, October 23, 2018

நின் கடன் அடியேனையும் தாங்குதல்.....
என் கடன் பணி  செய்து கிடப்பதே .......

என்னும் வாக்கிற்கு இணங்க அரன் திருப்பணிக்கு தங்கள் நேரத்தை,வாழ்க்கையை  அர்ப்பணித்தவரா நீங்கள்?

அப்படியெனில்

ஆனைக்கோயில் அரனுக்கு ஆவுடையார் அமைத்து தரவிருக்கும் அதிருஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் ....

அரன் அருளை பெற ஏற்ற தருணம் இதுவே ......
எங்குள்ளது ......? 
திருக்கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆத்தூர் (இது சப்த சிவ ஷேத்திரமாகும்) என்னும் இடத்திலிருந்து பாலாற்றங்ககரை பாலம் தாண்டியவுடன் வரும் கிராமம் திருஆனைக்கோவில் ..

இங்கு வானமே கூரையாக பல ஆண்டுகளாக பாண வடிவில் கோயில் கொண்டருளும் இப்பெருமானை ஆவுடையார் அமைத்து முறைப்படி பிரதிஷ்டை செய்து வழிபாட்டிற்கு கொண்டு வர ,அன்பர்கள் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள் ....

விரைவில் மேற்கூரையும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது ..

இப்பெருமான் நம் திருமயிலை கபாலீஸ்வரரை ஒத்த ஆகிருதியான (பருத்த) வடிவினராக விளங்குகிறார் ..இவருக்கு தகுந்த ஆவுடையார் செய்வதற்கு 27,000 ருபாய் நிதி உதவி தேவைப்படுகிறது ..
பக்தர்கள் அளிக்கும் நிதி உதவியை கொண்டே இத்திருப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் .
இப்பணியினை ஏற்றிருக்கும் ஸ்தபதி திரு அழகேசன் (7200905022) அவர்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் .....
அல்லது அடியார் திரு பாலா 9941045123....
அல்லது கோட்செங்கட்சோழன் சிவ சபை திருப்பணி மன்றத்தின் நிறுவனரான திரு சிவ.த. வெங்கடேசன் 94443528848/9677226260 என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு உங்கள் உதவியை நல்கலாம் .
விரைவில் திருக்கோயில் கட்டப்பட்டு அன்னாபிஷேகமும் இவர் காண வேண்டும் என்பதே இறைஅன்பர்களின் 
தீவிர விருப்பம் ஆகும்.




Wednesday, September 26, 2018

அன்று ....! மிக பிரம்மாண்டமான திருக்கோயில் !
இன்று.....! ஆசியாவின் மிக பெரிய கல்லறை !

ஆம்! அன்பர்களே ! எங்கே இந்த அவல நிலை? என்று தானே கேட்கிறீர்கள் ?

நம் சிங்கார சென்னையிலே தான் !

இப்படி ஒரு திருக்கோயில் இருப்பதே நம் சென்னை வாசிகள் 99% பேருக்கு தெரியாது ..மாற்று மதத்தவரின் பூத உடல்களுக்கு இங்கே அடைக்கலம் அளித்து விட்டு அடைக்கல நாதேஸ்வரர் என்ற மிக பொருத்தமான பெயருடன் இக்கல்லறையின் எதிரே அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயிலின் உள் ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அபயம் என்று தன்னை நாடி வருபவர்களுக்கு அடைக்கலம் தந்து அருள்கிறார் அழகாம்பிகை சமேத ஸ்ரீ அடைக்கல நாதேஸ்வரர் ....

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கீழ்ப்பாக்கம் தோட்டம் சாலையில் மிகப்பெரிய கல்லறை தோட்டத்திற்கு நேர் எதிரே இத்திருக்கோயில் அமைந்துள்ளது ...

ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்திலேயே , இரண்டு மிக பெரிய பிரகாரங்கள் , ராஜகோபுரம் என குடியிருந்த இப்பெருமானின் திருக்கோயில் கவனிப்பாரின்றி சிதிலமடைய துவங்கியிருந்தது ... 
மிகப்பெரிய கல்லறை தோட்டம் அமைக்க இடம் தேவைப்பட்ட அந்த நேரத்தில் சிதிலமடைந்த இத்திருக்கோயில் அவர்கள் கண்ணை உறுத்தவே , வந்தது இப்பெருமானுக்கு சோதனை !!!!!

அரன் திருக்கோயில் இடிக்கப்பட்டது . மிகப்பெரிய கல்லறை தோட்டம் கட்டப்பட்டது ....

இதுவே இவரின் வரலாறு ....பின்னர் ஆன்மீக அன்பர்கள் பலரது முயற்சியால் எதிரே உள்ள தர்மராஜா கோவிலில் இவருக்கு ஒரு சிறிய தனி கோயில் அமைக்கப்பட்டது ..

அன்பர்களே இன்று கருவறையில் ஒளி பொருந்திய கம்பீரமான திருமேனியராய் திகழும் இவரை தரிசித்த மாத்திரத்திலேயே நம் துன்பங்கள் பறந்தோடி விட்ட உணர்வு மேலிடுகிறது .....

இத்திருக்கோயில் நவகிரகங்கள் தத்தம் மனைவியரை மடியில் அமர்த்தி அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றனர் .

யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டுமல்லவா? சென்று தரிசியுங்கள் ! இப்பெருமானின் அருளை நீங்களே உணர்வீர்கள் !!

குறிப்பு: இப்பெருமானை இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் காணலாம் 

Saturday, September 15, 2018

சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களுக்கும் , உழவார பணி மன்றத்தினருக்கும் உடனடி கவன ஈர்ப்பு பதிவு இது 

அன்பர்களே ....தாமிரபரணி புஷ்கரணி கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் புனித தீர்ததங்களை நாம் எவ்வாறு வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் .....நம் நாட்டில் உள்ள தீர்த்தங்களையும் , திருக்கோயில் குளங்களையும் முறையாக பராமரித்தாலே போதும் .....தண்ணீருக்காகஅண்டை அயல் மாநிலங்களை நாம் கெஞ்சி கொண்டிருக்க வேண்டியதில்லை.

நகரங்களில் புனிதமான காஞ்சி மாநகரில் நடுநாயகமாக அமைந்து பெருமை சேர்ப்பது சர்வ தீர்த்த குளம் .....இத்திருக்குளத்தின் பெருமை சொல்லில் அடங்காது ...சிவபெருமானின்  ஆணைக்கிணங்க கங்கை காவேரி உள்ளிட்ட அனைத்து புனித நதிகளும் இத்திருக்குளத்தில் அடக்கம் ......அதோடு இந்த நதிகள் தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி பூசித்து பேறு பெற்றதாக கஞ்சி புராணம் கூறுகிறது ...

இங்கு பிதுர் கடன்கள் நிறைவேற்றுவதால் , நம் முன்னோர்கள் மிகுந்த திருப்த்தி அடைகின்றனர் ..இன்றும் மக்களால் இங்கு பிதுர் கடன்கள் செய்யப்படுகிறது .

அதோடு இத்தீர்த்தகுளத்தின் 4 கரைகளிலும் ஏராளமான புராதன திருக்கோயில்கள் அமைந்து காஞ்சி நகருக்கு பெருமை சேர்க்கின்றன ...

மேற்கு கரையில் :
அருள்மிகு காசி விஸ்வநாதர் 
அருள்மிகு காமேஸ்வரர் 
அருள்மிகு இரண்யேஸ்வரர் 
அருள்மிகு தீர்த்தேஸ்வரர் 

வடக்கு கரையில் 
அருள்மிகு லகு லீஸ்வரர் என்கிற தவளேஸ்வரர் திருக்கோயில் 

கிழக்கு கரையில் 
அருள்மிகு கங்காதேஸ்வரர் 
அருள்மிகு அனுமந்தேஸ்வரர் 

தெற்கு கரையில் 

அருள்மிகு மல்லிகார்ஜுனர் 
அருள்மிகு சீதேஸ்வரர் 
அருள்மிகு லக்க்ஷுமனேஸ்வரர் திருக்கோயில் 

தெற்கு குளக்கரை படிக்கட்டில் 
அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோயில் 

ஆகிய திருக்கோயில்கள் உள்ளன ..சரி விஷயத்திற்கு வருகிறேன் .....சில தினங்கள் முன்பு நான் சென்றிருந்தபோது கண் காட்சிகள் அதிர்ச்சிக்கு 
உள்ளாக்கின ......

அன்பர்களே அங்கு சுற்றிலும் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளால் சொல்லொணா அசுத்தத்திற்கும் , ஆக்ரமிப்பிற்கும் ஆளாகியுள்ளது இத்திருக்குளம் ..மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை ..

துணி துவைப்பதிலிருந்து , காலை கடன்கள் கழிப்பது வரை அனைத்துமே இங்குதான் ....படித்துறையின் நிலையோ கேட்கவே வேண்டாம் .....புதர்கள் மண்டி ...நாற்றம் குடலை பிரட்டுகிறது ....

அன்பர்களே யாரிடம் சொல்வது ?  எவரிடம் முறையிடுவது..? 

ராமர் , சீதை , லக்க்ஷுமணன் மன்மதன் , இரணியன் பூசித்த லிங்கங்கள் தனித்தனி கோயிலாக அமைந்துள்ளன .ஆனால் பக்தர்கள் வருகை என்பது கிடையாது ..பிரதோஷத்திற்கு மட்டும் சில பக்தர்கள் வருவதாக தெரிவிக்கிறார்கள் ....

அன்பர்களே  என் வேண்டுகோள் இரண்டு தான் ...

1. உடனடியாக இத்திருக்குளம் கழிவுகள் அகற்றப்பட்டு சீர் செய்யப்பட வேண்டும்.
     இல்லையேல் இத்திருக்குளம் ஒரு மினி கூவமாக மாறிவிடும் அபாயம் உள்ளது .

2. காஞ்சி காமாக்ஷி , ஏகாம்பரேஸ்வரர் , வரதராஜ பெருமாள் திருக்கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அற்புத புராதன பொக்கிஷங்களான மேற்சொன்ன திருக்கோயில்களையும் வணங்கி அருள் பெற வேண்டும் 

படத்தில் மிக பிரம்மாண்டமான இரண்யேஸ்வரர் ........மன்மதன் வழிபட்ட காமேஸ்வரர் 







லக்ஷ்மனேஸ்வரர்


Sunday, September 9, 2018

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ......

அன்பர்களே ....
அவன் தரிசனம் பெறுவதற்கே அவன் மனது வைக்க வேண்டும் ...அப்படியென்றால் அவன் திருப்பணியில் பங்கு 
பெறுவது என்றால் பல பல ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டுமல்லவா?

ஆன்மீக நெறியிலிருந்து சற்றும் வழுவாத நம் மாமன்னர்கள் பல்லாயிரக்கணக்கான திருக்கோயில்களையும் 
திருக்குளங்களையும் அமைத்து பராமரித்தனரே?  அவர்கள் கட்டிய அரண்மனைகள் இன்று காணப்படவில்லை
ஆனால் அவர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்கள் வானளாவ இன்றும் அவர்கள் பெருமையை பறைசாற்றுகின்றன அல்லவா?

அவ்வாறு அவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட திருக்கோயில்கள் பராமரிப்பின்றி பாழாகும்போது சிதைவுறும்போது நமக்கென்ன என்று வாளாவிருப்பது எத்தகைய அறியாமை?

நம் அறியாமை அக இருளை நீக்கி , நாம் உய்வதற்காகவே வாராது போல் வந்த மாமணியாக , அன்பர் ஒருவரது கனவில் தோன்றி தன இருப்பிடத்தை உணர்த்தி கோயில் கட்ட பணித்திருக்கிறான் இறைவன் 
என்றால்,  அன்பர்களே இந்த வாய்ப்பினை நாம் தவற விடலாமா?

வாருங்கள் போவோம் ...
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா குருவராஜபாளையம் வழி பாக்கம் பாளையம் அஞ்சல் பாக்கம் கிராமத்தில் 1000 வருடங்களுக்கும் மேற்பட்ட திருக்கோயில் ஒன்றில் வீற்றிருக்கும் கைலாசநாதர் பெருமானே தனக்கு கோயில் அமைக்க ஆணையிட்ட பெருமான்...

கொடுத்து வைத்த பாக்கம் கிராம மக்கள் சிரமேற்கொண்டு திருப்பணிகளை ஆரம்பித்து உள்ளனர் இறைவன் திருவருள் ஒன்றையே துணையாக கொண்டு ...

அந்த சகோதரர்களுக்கு நாம் உதவாமல் யார் உதவுவார்கள் ?  அன்பர்களே...வாங்கி கணக்கு விபரங்கள் மற்றும் 
அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ...

அவன் திருப்பணியில் பங்கு பெற்று அவன் அருளுக்கு பாத்திரம் ஆகுங்கள் ....

தொடர்புக்கு 
சிவ குபேந்திரன் - 9345883326, 
சிவ இராமமூர்த்தி - 9025345747, 
சிவ ஹரிவசந்த் - 8695875868.


Account No.6655846738, IFSC Code:IDIB000O001,
 Indian Bank-odugathur Branch
Bank Account Name: ARULMIGU UMAMAHESWARI UDANURAI KAILAYANATHAR TEMPLE TRUST

கவனிக்க : IFSC code-ல்  மூன்றாவது சைபர் அடுத்து உள்ளது ஆங்கில எழுத்து o வாகும் ...



அஞ்சல் கணக்கு எண் : 3935204147








Saturday, August 18, 2018

அன்பர்களே......பூர்வ ஜென்ம புண்ணியம் என்கிறார்களே அதை எளிதில் எப்படி அடைவது?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ....என்பார் மாணிக்கவாசகர் 
அவனுடைய திருக்கோயில் திருப்பணிக்கு உதவுவதற்கும்  அவன் அருள் கண்டிப்பாக வேண்டும் ...

சிவ  திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் பல தலைமுறையினர்இவையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து பின்  கைலாயத்தில் நித்ய வாசம் செய்யும் பேற்றினையும் பெறுவர்   என்பது திண்ணம் ....

நம் நாட்டை ஆண்ட மாமன்னர்கள் அதனாலேயே பற்பல கற்கோயில்களை கட்டினார்கள் 
அவை இன்றும் கம்பீரமாக எழுந்து நின்று அவர்களின் பெயரை உலகறிய செய்து கொண்டிருக்கின்றன ....

அப்படிப்பட்ட ஒரு பூர்வஜென்ம பாக்கியத்தை நாம் எளிதில் அடைய சந்தர்ப்பம் ஒன்று வந்துள்ளது 
அன்பர்களே பயன் படுத்தி கொள்ளுங்கள் ......

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் வேலூர் பாளையம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பிரம்மேஸ்வர் ஆலய திருப்பணிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் ..மிகவும் சிரமப்பட்டு திருப்பணியை நிறைவேற்றி 
உள்ளனர் எனினும் எஞ்சிய திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் கிராம மக்கள் .....

கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்ட போதிலும், குறித்த நேரத்தில் பணிகள் முடியாமல் பொருளாதார பற்றாக்குறையினால் தடைபட்டுள்ளது ..

எத்தனை சிறிய உதவியானாலும் அன்பர்களே அவை சிறு துளி பெரு வெள்ளமாக பெருகும் இறைவன் அருளால் ....

இத்தகைய அரிய திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் அன்பர்கள் பெரும் செல்வச்செழிப்பில் திளைப்பவர்கள் அல்லர் ..  அன்பர்களே.... அவர்கள் மிகவும் எளிய வாழ்க்கையை நடத்துபவர்கள் தாம் ...

அவர்களுக்கு உதவுவது ஒன்றே பல பிறவிகளில் நாம் சேர்த்து வைக்கப்போகும் பூர்வஜென்ம புண்ணியம் ...

அவர்களது அலைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ளது ...அன்பர்களே அவற்றை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கலாம் .






Tuesday, August 14, 2018

விஷ கடிகளால் மரணம் .....விஷ ஜுரங்களால் வேதனை .....இங்கு அறவே இல்லை ......

ஆம் அன்பர்களே .....சூரியன் வழிபட்ட (பரிதி என்றால் சூரியன்)திரு பரிதியூர் எனப்படும் பருத்தியூர் என்னும் தலத்தில் தான் இத்தகைய சிறப்பு ....
இங்கு கோயில் கொண்டு அருளும் அன்னை பிரசன்ன  பார்வதி சமேத  விஷஹரேஸ்வரர் இத்தகைய சிறப்பை அருள்பவர் ...
இங்கு வசிப்பவர்களை விஷ ஜந்துக்கள் தீண்டுவதில்லை ......விஷ ஜுரங்கள் பாதிப்பதில்லை என கூறுகிறார்கள் ......இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கும் இதே விதி பொருந்தும் .....

எங்குள்ளது ?

திருவாரூர் மாவட்டம் குடந்தை நன்னிலம் சாலையில் அமைந்துள்ளது இந்த சின்னஞ்சிறு கிராமம் ..விவசாயம் பிரதான தொழில் .....
அருகில் புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம் .அமைந்துள்ளது  ..
ஆவணம் பருத்தியூர் என அழைக்கப்படும் இத்தலம் திருநல்லகூரூர் (கூகூர்)என வழங்கப்படும் தேவார  வைப்பு  தலம் அருகில் பிலாவடி தாண்டியதும், வருகிறது ....
பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்று தொலைவில் திருக்கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது 

புராண வரலாறு 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷம் சூரியனையும் விட்டுவைக்கவில்லை ....ஆம்!  சூரியன் தன் அழகையும் ஆற்றலையும் இழந்து மெலிந்தான் ....
ஈசனை சரணடைந்தான் .பின் இறைவன் கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உருவாக்கி பலகாலம் தவமிருந்து இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள இறைவன் அருளால் இழந்த தன் ஆற்றலை திரும்ப பெற்றதாக வரலாறு .

எனவே இறைவன் திருநாமம் விஷ ஹரேஸ்வரர் என வழங்கப்படுகிறது ....
பின்னர் ஆண்ட மன்னர்களால் திருக்கோயில் கட்டப்பட்டு , பின் ஆண்டுகள் செல்ல செல்ல சிதிலமடைந்து ,  தற்போது ஆன்மீக அன்பர்களின் பெரு முயற்சியால் திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது ....

அன்பர்களே பரிதி வழிபட்ட இப்பெருமானை நீங்கள் தரிசித்து நோய் இல்லா பெருவாழ்வு பெறுங்கள் ....அருகில் ஆவணம் ,ஸ்ரீவாஞ்சியம் போன்ற ஏராளமான தலங்கள் உள்ளன .
ஆலய அர்ச்சகர் அலைபேசி எண் தந்துள்ளேன் ...அவரை தொடர்பு கொண்டு திருக்கோயிலை நீங்கள் தரிசனம் செய்யலாம் .

அரும்பாடு பட்டு புராதன திருக்கோயில்களை புனரமைப்பது நம் நலத்திற்காகவே ....எனவே ஸ்ரீவாஞ்சியம் மற்றும் நவகிரக யாத்திரை செல்பவர்கள் தவறாமல் இத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்யுங்கள் ....இறைவன் அருள் பெற்று செல்லுங்கள் 

அர்ச்சகர் திரு ராஜப்பா குருக்கள் 

அலைபேசி எண் 9943343031





Monday, August 6, 2018


உத்தர்கண்ட் மாநிலம் டேராடூன் 
லக மண்டல்  .
திருக்கோயில்கள் 


காண முடியுமா இத்தகைய அரிய காட்சியை? 
கிடைத்தவர்கள் பல பிறவிகளில் கொடுத்து வைத்தவர்கள்!!

உத்தர்கண்ட் மாநிலம் , டேராடூன் மாவட்டம் ,லக மண்டல்  , முசெளரி ---யமுனோத்ரி வழித்தடத்தில் இருக்கும் புராதன பெருமை வாய்ந்த சிவஸ்தலம்.

தலைநகர் டேராடூன் நகரிலிருந்து 125 கிலோமீட்டரில் அமைந்துள்ளது .அழகிய மலைகள் சூழ அமைந்துள்ளது ...
சிறிதும் பெரிதுமாக லக்க்ஷம் லிங்கங்களை கொண்டது இத்திருக்கோயில் ....
லக மண்டல் என்றால் லக்க்ஷம் திருக்கோயில்கள் அல்லது லக்க்ஷம் சிவலிங்கங்கள் என பொருள்படும் .....


தற்போது அவ்வளவு இல்லை எனினும் பாண்டவர்கள் காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது ...

பாண்டவர்கள் வனவாசத்தின் போது பல நாட்கள் இவ்விடம் தங்கியிருந்ததாக வரலாறு கூறுகிறது.


அரக்கு மாளிகையில் தீ வைக்கப்பட்டு,துரியோதனாதிகளிடமிருந்து தப்பித்த பாண்டவர்கள், இவிடம் தங்கி பல சிவ மூர்த்தங்களை அமைத்து வழிபட்டுள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரகண்ட் மாநிலத்தின் 
லக மண்டல்திருகோயில்.
பல பெருமை வாய்ந்த முற்றுப்பெறாத தலங்கள் இங்கு உண்டு. கண்ணாடியின் வழவழைப்பை மிஞ்சும் இறைவனின் திருமேனியை பாருங்கள்.

மேலும் ஒரு தல புராணமும் நிலவுகிறது .....பிரம்மனும் விஷ்ணுவும் தமக்குள் யார் பெரியவர் என சண்டையிட்ட பொது மிகப்பெரிய ஜோதி பிழம்பாய் , அடிமுடி காண இயலாதவராய் இருவருக்கும் நடுவில் எழுந்தருளியதாக 
அப்போது பிரம்மன் விஷ்ணு இருவரும் இங்கு இறைவனை ஸ்தாபித்து வழிபட்டதாகவும் வரலாறுள்ளது ..

அவரே மஹா மண்டலேஸ்வர் என்னும் பெயரில் எழுந்தருளியுள்ளார் ...

இப்பதிவை கண்ணுறும் அன்பர்கள் எவரேனும் ஒருவராவது இத்தலத்திற்கு சென்று வழிபடுவராயின் அளவற்ற மகிழ்ச்சியை அடைவேன்.

ஹரித்துவார் நகரிலிருந்து 165 கிலோமீட்டரிலும் , ரிஷிகேஷிலிருந்து 151 கிலோமீட்டரிலும் இத்தலம் அமைந்துள்ளது 

Location: on Mussoorie – Yamnotri motor able road, about 5kms ahead of Bernigad









Monday, July 2, 2018

மறைந்து நின்றிந்த மாமணி சோதியான் .......பூமியை பிளந்து வந்துள்ளான் நாம் உய்வதற்காக ....

எத்தனை எத்தனை ஞானிகள் , ரிஷிகள், மகான்கள் , முனிவர்கள் சித்த புருஷர்களால் வணங்க பட்டிருப்பார் இவர்?  எத்தனை திருவிழாக்கள் , உற்ஸவங்கள் கண்டிருப்பார் ? எத்தனை பிரம்மாண்டமான திருக்கோயிலில் குடியிருந்து அருள்புரிந்திருப்பார்? 

இப்படிப்பட்ட திருமேனிகள் நமக்கு கிடைக்குமாயின் அதை விட நாம் செய்துள்ள தவம் வேறென்ன உள்ளது ?

வராது போல் வந்த மாமணியாக வந்துள்ள இப்பெருமானுக்கு திருக்கோயில் அமைக்க நாம் கொடுத்து அல்லவா வைத்திருக்க வேண்டும் ? 

வாருங்கள் போவோம் அன்பர்களே அத்திப்பாக்கம் என்னும் கிராமம் நோக்கி .....
இங்கு மிக பிரம்மாண்டமான திருமேனியராக, நம்மை ஆட்கொள்வதற்காக பலகாலம் பூமியில் புதைந்திருந்த 
இப்பெருமான் கண்டெடுக்கப் பட்டுள்ளார் ..சுமார் 2500 ஆண்டுகள் பழமையானவராக கருதப்படுகிறார் ..
கிராம மக்களால் தற்போது திருப்பணி துவங்கப்பட்டுள்ளது ....

தற்போது தரைத்தளம் வரையே கட்டப்பட்டுள்ளது ....எஞ்சியிருக்கும் பணிகளை முடிக்க , அன்பர்களே அனைவரது ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது ...
விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிராம மக்களால் பிறரது உதவி இல்லாமல் திருப்பணியை முடிப்பது மிக சிரமம் அல்லவா?  

ஆகவே இதை கண்ணுறும் ஆன்மீக அன்பர்கள் , சிவ பக்தர்கள் , பொது மக்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் .....

கீழ் வரும் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உங்கள் உதவியை நல்குங்கள் ....இறைவன் அருளுக்கு பாத்திரமாகுங்கள் ......
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராம மக்களுக்கு உதவிடுங்கள் ...

இருப்பிடம் :  அத்திப்பாக்கம் கிராமம் விழுப்புரம் மாவட்டம் , திருக்கோவிலூர் வட்டம் , திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் உள்ளது .....

அலைபேசி எண்கள் :

சிவ ஈஸ்வரன் 9176757479
சிவ  ஏழுமலை (பாண்டிச்சேரி) 8300086563
சிவ  மணிகண்டன்(அத்திப்பாக்கம்) 8523940178

சிவ  ஏழுமலை முதலூர் 9865629567





Saturday, June 23, 2018

விபத்திலிருந்து காக்கும் விடைவாகனன் 

வாகன விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.
நாளிதழ்களை திறந்தால் தினசரி 10 வாகன விபத்துகளாவது அங்கங்கு ஏற்படுவதை நாம் பார்க்கிறோம்.
விபத்துகள் இல்லாத நாட்களே இல்லை என்றாகிவிட்டது.

இத்தகைய விபத்துகளில்லிருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கு நாம் வணங்க வேண்டியது தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருநெய்த்தானம் அருகில் இருக்கும் "திருப்பெரும்புலியூர்" வியாக்ரபுரீஸ்வரர்
ஆலயமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக புராதனமான ஆலயத்தில், நம் வாகனங்கள் பழையதோ புதிதோ, எடுத்துச் சென்று வழிபட, விடைவாகனன் அருளால், விபத்தில்லா வாழ்வு நாம் பெறலாம்.


ஐந்து புலியூர்களில் இதுவும் ஒன்று .

மற்ற புலியூர்கள் , திருஓமாம்புலியூர் , எருக்கத்தம்புலியூர் ,பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்),பாதிரிபுலியூர் 

தஞ்சையிலிருந்து ,கும்பகோணத்திலிருந்து ,திருவையாறிலிருந்தும் பேருந்து வசதிகள் நிறையவே உள்ளது ..

இறைவி :சௌந்தர்யநாயகி , சம்பந்தரால் தேவார பாடல் பெற்ற இத்தலம் ராஜராஜ சோழன்  காலத்தியது ..
அருணகிரி நாதரும் இத்தல முருகன் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார் ..

தலவிருட்சம் சரக்கொன்றை .....தீர்த்தம் காவேரி