Thursday, November 22, 2018

திகிலூட்டும் அடர்ந்த முந்திரி காடு .......
ஆங்காங்கே சிதறி கிடக்கும் நூற்றுக்கணக்கான லிங்க மூர்த்தங்கள் ....
கண்ணுக்கெட்டும் தூரம் வரை மனித சஞ்சாரம் கிடையாது ...
சற்றே அமானுஷ்யத்துடன் கூடிய ஒரு ஆன்மீக பயணத்திற்கு நீங்கள் தயாரா?

அன்பர்களே.....!

வாருங்கள் .....புறப்படுங்கள் ஒரு குழுவாக.....விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பாண்டிச்சேரி அருகில் உள்ள பூத்துறை கிராமத்திற்கு .(மணவெளி என்றும் சிலர் கூறுகின்றனர் )

எங்குள்ளது....?

திண்டிவனம் --பாண்டி சாலையில் புகழ் பெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் திருக்கோயில் அடுத்து வரும் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு(பூத்துறை) நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் முந்திரி காட்டினுள் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம் ..

ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் உதவியாக உள்ளனர்....சோலையப்பன் என்பவரது அலைபேசி எண் தந்துள்ளேன் 

சொந்த வாகனங்களில் செல்பவராக இருந்தால் பூத்துறை கிராமம்  ஹாரிசான் பேக்ஸ் என்கிற தனியார் நிறுவனம் அடுத்து வரும் தெருவின் வழியே சென்று அங்குள்ள ஒரு அம்மன் கோயில் தாண்டியவுடன் வலதுபுறம் வரும் சற்றே  உள்ளடங்கிய ஒரு முந்திரி காட்டினுள் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட பெருமான்களை நீங்கள்  வணங்கி மகிழலாம் ....பூஜை பொருட்களை கண்டிப்பாக கூட்டு ரோட்டில் வாங்கி கையில் வைத்திருக்க வேண்டும் ..

இப்பகுதியில் வசிக்கும் மக்களே இத்தலத்தை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை ....

நூற்றுக்கணக்கான இந்த லிங்க திருமேனிகள் இங்கு வந்தது எப்படி? யார் பிரதிஷ்டை செய்தனர் ...தல வரலாறு ..? என எதையும் அறிய முடியவில்லை ...இத்திருக்கோயிலில் 63 நாயன்மார்களும் லிங்க திருமேனியராகவே காட்சியளிக்கின்றனர் ....அம்மனும் லிங்க உருவில் தான் அருள்கிறாள் ...

அருகே, செல்லும் வழியில் உள்ள திருச்சிற்றம்பலம் கைலாயநாதர் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு பொலிவுடன் திகழ்கிறது ...தரிசனம் செய்ய மறவாதீர்கள் ...

அதேபோன்று கிடைத்தற்கரிய இத்தலத்தையும் பக்தர்கள் வழிபட ஏதுவாக புனரமைக்கப்பட வேண்டும் ..

பெயர்ப்பலகை இல்லாதமையால் முதற்முறை வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .இக்குறையையும் நீக்கவேண்டும் ....

அருகே தேவார பாடல் பெற்ற திருக்கோயில்கள் நிறைய உள்ளன .....
கிளியனூர் , ஒழித்தியாப்பட்டு ,இரும்பை மாகாளம் போன்றவை அவற்றுள் சில ...

அன்பர்களே .....

இத்திருத்தலத்தை வெளிச்சத்திற்கு , வெளிஉலகிற்கு கொண்டு வரும் பொறுப்பு நம் கையில் தான் உள்ளது....

நீங்கள்சென்றுதரிசித்து மறவாமல் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் 

ஆட்டோ ஓட்டுநர் 
திரு சோலையப்பன் 9597660851











Wednesday, November 14, 2018

நாடி செல்லுங்கள் நலிவடைந்த திருக்கோயில்களை .......
அன்பர்களே .....ஏன் ? என்ன காரணம்?

 நீங்கள் தேடி சென்று மணிக்கணக்கில் வரிசையில் நின்று , உண்டியலில் செலுத்தும் பணம் அந்த திருக்கோயில் வளர்ச்சிக்கோ , அங்கு பணிபுரியும் அர்ச்சகர்கள் வறுமையை போக்கவோ 

பயன் படுத்தப்படுவதில்லை ....மாறாக அவை கோடியில் புரள்பவர்களின் கைகளுக்கு தான்  செல்கிறது.

இறைவனுக்கு மாற்று வஸ்திரம் கூட இல்லாத திருக்கோயில்கள்      இங்கு பல உள்ளன .


 மின்சார கட்டணம் செலுத்த இயலாத இருளில் மூழ்கி கிடைக்கும் திருக்கோயில்கள் பல .


 திருப்பணி நிறைவேற்றப்படாததால் அழிவின் பிடியில் சிக்கியிருக்கும் திருக்கோயில்களோ  பலப்பல .


 ஏழை அர்ச்சகர்களுக்கு மாத வருமானமாக ரூ 150/- கூட வழங்க வக்கில்லாத பல ஆண்டுகள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கா உங்கள் உண்டியல் பணம்?


பக்தர்கள் வருகையின்மையால் பெரும்பாலும் பூட்டியே கிடைக்கும் பாடல் பெற்ற   பல திருத்தலங்கள் காப்பாற்றப்படுவதற்கு ஏன் உங்கள் உழைப்பு பயன்படக்கூடாது ?


வாருங்கள் ....அப்படி ஒரு பாடல் பெற்ற திருத்தலத்தின் நிலையை காணலாம் ...


திருப்பெரும்புலியூர் .....

அன்றலர்ந்த பூக்களை பறிக்க வசதியாக புலிக்கால் கேட்டு பல ஆண்டுகள் தவமிருந்து பெற்ற புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்ர பாதர் , ஆதிசேஷனின் அவதாரமான 
பதஞ்சலி முனிவர் மற்றும் தேவாதி தேவர்கள் பலராலும்,மூவராலும்  வணங்கி வழிபட பெற்ற திருத்தலம் இது ...

இங்கு அமைந்துள்ள சௌந்தர்யநாயகி சமேத வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் மேற்கூறிய அவலங்களுக்கு முற்றிலும் பொருந்தும்.   


அன்பர்களே .....இத்தலத்தின் பெருமையை ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலும் விவரிக்க முடியாது ..


இன்றைய காலகட்டத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் இத்திருக்கோயில் சிறந்த பரிகாரமாகும் ....கருவறையில் ஒளி பொருந்திய திருமேனியராய் கருணையே உருவானவராய் வீற்றிருக்கும் இறைவனை காணும்போது நம் துன்பங்கள் விலகி ஓடிவிட்டதை நம் அனுபவத்தில் உணரலாம் 




பக்தர்கள் வருகையின்மையால்  , குன்றிலிட்ட விளக்கு போல் பிரகாசிக்க வேண்டிய இத்திருக்கோயில் குடத்திலிட்ட விளக்கு போல் சோபையின்றி வருமானமின்றி வெறிச்சோடி இருக்கிறது ....

அருகில் உள்ளவர் திருக்கோயிலை திறந்து காட்டி தரிசனம் செய்ய உதவுகிறார்கள் ....


இருப்பிடம் :  இத்திருக்கோயில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திருநெய்த்தானம் எனப்படும் தேவார பாடல் பெற்ற தலத்திற்கு அருகில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் பாதையில் அமைந்துள்ளது ...


நாம் செய்ய வேண்டியது என்ன?


அன்பர்களே மாதம் ஒருமுறையாவது இத்தகைய பெறற்கரிய திருக்கோயில்களை குடும்பத்துடன் சென்று வழிபடுங்கள்....


நம் குழந்தைகளுக்கு, இளைய தலைமுறையினருக்கு புராண வரலாறுகளை அவர்கள் அறியுமாறு எடுத்து கூறுங்கள் ...


நீங்கள் சென்று வருவதோடு நின்று விடாமல் பலரும் அறிந்து கொள்ளுமாறு அதனை பகிர்ந்து கொள்ளுங்கள் ....


தற்போது தான் முகநூல் , whatsapp என்று ஏராளமாக இருக்கின்றனவே .....அவற்றை உபயோகமாக நாம் பயன்படுத்துவோம் . பழத்திருக்கோயில்களை போற்றுவோம் ..பராமரிப்போம் ..