Monday, November 11, 2019

அல்லல் என் செய்யும் ? அருவினை என் செய்யும் ? ஆபத்தாருண சுவாமி கடைக்கண் பார்வை முன்னே ...

அருள்மிகு காமாட்சி அம்மை உடனாய ஆபத்தாருண சுவாமி, அம்பல், நாகை மாவட்டம்.(சட்ட நாத சாமி கோயில் )

காரைக்கால் -பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ளது தேவார பாடல் பெற்ற அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ....இத்திருக்கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது ஆபத்தாருண சுவாமி திருக்கோயில் .
சட்டநாதர் கோயில் என்று அழைக்கப்படும் இத்திருக்கோயிலை கண்டால் கதறி விடுவீர்கள் ........

மிகச்சிறந்ததொரு பரிகார தலம் மிகவும் சிதிலமடைந்து புதர்கள் மண்டி , ஒரு நல்ல ஓவியத்தை கண்ணா பின்னா வென்று கசக்கி போட்டதுபோல் உள்ளது அதன் இன்றைய நிலை .

சட்டநாத பெருமான் தன் சூலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தம் இங்கு உள்ளது . இது சகல ரோகங்களையும் நொடியில் போக்க வல்லது ...... குறிப்பாக தொழு நோய் ....இந்நோய் உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி இப்பெருமானை உளமார வணங்கி , இந்நீரினை பருகி வர தொழு நோய் உள்ளிட்ட தீராத நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ...

இன்று இத்தீர்த்தம் சுருங்கி ஒரு கிணறு மட்டுமே காட்சியளிக்கிறது ......

கருவறையில் இறைவன் ஆபத்தாருண சுவாமி , நம் ஆபத்துகளை களையும் விதமாக தேஜோமயமாக விளங்குகிறார் ......பார்த்த மாத்திரத்தில் நம் கண்கள் பணிக்கிறது ....

திருகோயில் மெய்காப்பாளர் திரு மோகன் அவர்கள் கோயில் அருகிலேயே உள்ளார். தரிசனம் செய்ய உதவுகிறார்.
       
அவர் மொபைல் எண் 9962184946

இத்தகைய அரிய திருகோயில்களை நாம் இழந்துவிட கூடாது.
அன்பர்களே குறைந்த பட்ஷம் சென்று தரிசனமாவது செய்வோம் .

அன்பர்களே ......இறைவன் கருணை கடல் தான் ...ஆனால் நாம் மொள்ள உபயோகிக்கும் பாத்திரம் தான் மிக சிறிது . இது யாரால் சொல்லப்பட்ட வரிகள் என்பது தெரியவில்லை ....ஆனால் இத்திருக்கோயிலை  பார்க்கும்போது  இந்த வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது ..


Thursday, November 7, 2019

90% சென்னை மக்கள் அறியாத சென்னை சிவப்பதிகள் ...
தொலைந்து போன அடையாளங்கள் ....

முன்பு இருந்தது போல் அன்று சென்னை மாநகரில் ஆளுயர கட்டடங்கள் இல்லை ... பேருந்து வாகன நெரிசல்கள் இல்லை ....தொழில் நுட்ப வசதிகள் இல்லை 

ஆனால் 
வானுயர திருக்கோயில்கள் இருந்தன ...
தேரோடும் வீதிகள் இருந்தன ....
ஆன்மீக ஈடுபாடு இருந்தது ......

அசுர வளர்ச்சியாலும் அந்நியர்கள் படையெடுப்பு , மற்றும் மாற்று மதத்தினர் காழ்ப்பு உணர்ச்சியாலும் நம் சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த திருக்கோயில்களின் மூலவர்கள் சிலவற்றின் நிலைமையை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம் வாருங்கள்...
அமைஞ்சிக்கரை , சேத்துப்பட்டு பகுதி 

அமைந்தகரை அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் 
அகத்தியர் வழிபட்ட ஒரு காலத்தில் மிகப்பெரிய திருக்கோயிலாக கோலோச்சி கொண்டிருந்த ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் இன்று ஆனந்தவல்லி தெரு முனையில் ஒரு மரத்தடியில் உள்ள மிகச்சிறிய அம்மன் கோயில் ஒன்றில் பாணம் உயரம் குறைக்கப்பட நிலையில் உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால் அது தான் உண்மை. 

கிட்டத்தட்ட தூக்கி வீசப்பட்ட இவரது பிரம்மாண்டமான திருக்கோயில் இருந்த இடத்தில் தற்போது தேவாலயம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது ...

இருப்பிடம் ...அய்யாவு நாயுடு காலனி , விஜயேஸ்வரி தெரு .....சர்ச் அருகில் ..
( படம் பார்க்க)

சேத்துப்பட்டு கைலாயநாதர் 

அடுத்து நாம் தரிசனம் செய்ய இருப்பது குட்டலை அம்மன் கோயில் (கட்டளை தான் குட்டலை ஆகிவிட்டது )
வளாகத்தில் அமர்ந்து அருள்பலிக்கும் கைலாயநாதர் .....சேத்துப்பட்டு .
இவரும் தனி பெரும் கோயில் கொண்டு விளங்கியவர் தாம் ....
மிக சிறிய கோயில் தான் ..சுயம்பு லிங்க திருமேனி . 
என்ன விசேஷம் என்றால் இவர் திருமேனியில் ஓம் என்று பொளிந்து வைத்துள்ளார்கள் ....
உளி கொண்டு .....ஏன் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம் .
( படம் பார்க்க)

சேத்துப்பட்டு சிவன் 1

அடுத்து சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் வெட்ட வெளியில் மயானம் அருகே (தற்போது இல்லை )
அமைந்திருக்கும் சிறிய அம்மன் கோயில் வெளியே உள்ள லிங்க திருமேனி ....
பார்க்க மிக வித்யாசமான திருமேனி .....
இவரை தரிசனம் செய்ய அருகில் உள்ளோரிடம் விசாரித்து செல்ல வேண்டும் ..

சேட்பட் சிவன் 2

அடுத்து நமக்கு சற்றே ஆறுதல் அளிப்பது சேத்துப்பட்டு மெக் நிக்கோலஸ் தெரு முனையில் உள்ள ஓம் சக்தி பால விநாயகர் திருக்கோயிலில் உள்ள சோமநாத பெருமான் தான் .
சிறிய கோவிலாக இருந்தாலும் பிரம்மாண்டமான விநாயகர் , அம்பாள் , முருகன், பைரவர் அனைவரும் நம்மை வசீகரிக்கும் விதத்தில் எழுந்தருளியுள்ளார்கள் .மிக நேர்த்தியான சிலா ரூபங்கள் ....நன்கு பராமரிக்கப்படும் திருக்கோயில் ....


இன்னும் இதுபோன்று பல திருக்கோயில்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்து நிற்கின்றன ...நம் சிங்கார சென்னையில் 

அன்பர்களே ....
நாம் என்ன செய்யபோகிறோம் ?  
இப்போது விழித்து கொள்ளாவிட்டால் பின் எப்போது ?

சென்று தரிசனம் செய்யுங்கள் குடும்பத்தாருடன் ...

பிரபல திருக்கோயில்களை , கூட்டத்துடன் கூட்டமாக , வரிசையில் நின்று தரிசிப்பதை தவிர்த்து இத்தகைய திருகோயில்களை நாடி சென்று வணங்குங்கள் ....


இருக்கும் திருக்கோயில்களையாவது காப்பாற்ற வேண்டும் அல்லவா? 
அந்நியர்களின் கைகளிலிருந்து தன் இன்னுயிரை ஈந்து காப்பாற்றப்பட்ட அந்த மூலவர்களை நாம் சென்று தரிசிக்க கூட தயங்குகிறோம் என்பதே கசப்பான உண்மை ....

அகஸ்தீஸ்வரர்-அமைந்தகரை 



கைலாயநாதர் --குட்டலை  அம்மன் கோயில் -சேத்துப்பட்டு 
சிவன் கோயில் -சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் 


சோமநாதர் திருக்கோயில் -மெக் நிக்கோலஸ் தெரு -சேத்துப்பட்டு 






Thursday, August 29, 2019

அற்புத பலன் தரும் அரிய திருக்கோயில் 

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வாலி வழிபட்டு தன் ப்ரஹ்மஹத்தி தோஷம் நீக்கி கொண்ட தலம் . 

யாரெல்லாம் வழிபடலாம் ..?

⇝ நாக தோஷம்,காலசர்ப்ப தோஷம் , அதனால் திருமண தடை , மழலை         பாக்கியம் தடைபடுதல் .
⇝ வாஸ்து குறைபாடு , வீடு கட்டுவதில் இழுபறி ....
⇝ கலைத்துறையில் (சினிமா , டிராமா , நடனம் , மெல்லிசை) பிரகாசிக்க முடியாமல் முன்னேற்றம்  தடைபடுதல் 
⇝வியாபாரத்தில் எதிரிகளால் தொல்லை 
⇝கல்வியில் மந்த நிலை 
⇝ களத்திர தோஷம் அதனால் இல்லவாழ்க்கையில் நிம்மதியின்மை 

உங்கள் துன்பம் எதுவாயினும் வாருங்கள் காரியசித்தி கணபதி, .ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை திருவாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு ....

இவருக்கு செய்யப்படும் பாலபிஷேகம் கருநீல நிறமாக மாறுவது பேரதிசயம் ...
காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இப்பாலை பருகினால் தோஷத்திலிருந்து முற்றிலும் விடுபடுவர்.

எங்குள்ளது ...?

திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி வட்டம் , பஞ்சட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 1/2 கிலோமீட்டர் தூரத்தில் நத்தம் என்று தற்போது அழைக்கப்படும் கிராமத்தில் வீற்றிருந்து அருள்பலிக்கிறார் வாலி வழிபட்ட வாலீஸ்வர் பெருமான் ....
புராண பெயர் இகணன் பாக்கம் ....(இகணன் , ப்ரம்மா வின் பெயர் )
ப்ரம்மா நாரதரின் ஆலோசனைப்படி இங்குள்ள காரிய சித்தி கணபதியை வழிபட்டு இழந்த தன் படைப்பு தொழில் ஆற்றலை பெற்றார் ...

இவரை வழிபடுவதால் நடக்கவே நடக்காது என்று நம்பப்படும் காரியங்களும் விரைவில் ஈடேறுவது கலியுக அதிசயமாகும் .

இங்குள்ள மற்றோர் அதிசயம் உமா சகித பிரதோஷமூர்த்தி .....
வேறெங்கும் காண இயலாத வகையில் இவர் உமையாளை தன ஒருகையால் அணைத்தவாறு உள்ளார் ....


பிரதோஷ தினத்தில் இப்பெருமானை வழிபடுவோர் இல்லற வாழ்க்கையில் பிணக்குகளின்றி வாழ்வர் 

சிவாலயமாக இருப்பினும் , இக்கணபதியே இங்கு பிரதான தெய்வமாக வழிபட படுகிறார் ......

அன்பர்களே .....

முறையான பேருந்து வசதியின்மையால் தங்கள் சொந்த வாகனத்தில் வருவது சால சிறந்தது .செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து , கும்மிடிப்பூண்டி , பழவேற்காடு ,பொன்னேரி செல்லும் பேருந்துகளில் 
ஏறி பஞ்சட்டியில் இறங்கி கொள்ளலாம் ...

அர்ச்சகர் அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ...

மிக சிறந்த பரிகார தலம் ஆதலால் அவரிடம் முன்கூட்டியே தெரிவித்து விட்டு செல்லலாம் ...இங்குள்ள தீர்த்தமும் வாலியால் உருவாக்கப்பட்டதே ......இது வாலி தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது .
இத்தீர்த்தத்தில் நீராடுவது கங்கை யில் நீராடுவதற்கு சமமாகும் ....

இத்தீர்த்தத்தில் நீராடி இப்பெருமானை வழிபடுவதால் சகல தோஷங்களை நீக்குவதோடு , சுருட்டப்பள்ளி திருத்தலத்தை நீங்கள் 3 முறை வழிபடுவதின் பலனை பெறலாம் ...

அருகில் உள்ள பஞ்சேஷ்டி  அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலும் மிக சிறந்த பரிகார தலமே .......

இத்துணை பெருமைகள் மிக்க பரிகார தலம் வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளது ....

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் ?

அன்பர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் ...அர்ச்சனை பொருட்களை கையோடு எடுத்து செல்லுங்கள் ..

திருக்கோயில் அர்ச்சகர்கள் :

சுவாமிநாத குருக்கள் , நத்தம் , அலைபேசி எண் :94440 53356

சுரேஷ்பாபு குருக்கள் , நத்தம் , அலைபேசி எண் :94440 91441






Wednesday, August 7, 2019

குழந்தையும் ......தெய்வமும் 

அன்பர்களே......
குழல் இனிது ....யாழ் இனிது ...என்பார்கள் 
மழலை செல்வம் இல்லாதவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது ...
சமூகத்தாலும் , உறவுகளாலும் ஏச்சு பேச்சுகளுக்கு உள்ளாகி சொல்லொணா துயருக்கு உள்ளாவார்கள் .....    ஆனால் இனி இல்லை இத்தொல்லை ........

வாருங்கள் ......சந்தான சுந்தரேஸ்வர பெருமான் மீனாட்சியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கொத்தங்குடி திருத்தலம் நோக்கி .......உளமார வணங்குங்கள் ....அர்ச்சகர் பரிகார பூசை குறித்து விளக்குவார் ...நம்பிக்கையுடன் செய்யுங்கள் ....மழலை செல்வம் நிச்சயம் .....

இன்று இங்கு வந்தோர் பலர் இல்லங்களில் தொட்டில்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன ...பலன் அடைந்தோர் பலர் .....

அன்பர்களே ....

இன்று பொலிவுடன் விளங்கும் இத்திருக்கோயில் , முன்பு அருகில் செல்லவே அஞ்சும் வண்ணம் முட்புதர்கள் மண்டி சிதிலமடைந்து காணப்பட்டது ...ஆம் !  பல்லாண்டுகளாக !!  இந்நிலை கண்டு வருந்திய இப்பகுதியை சேர்ந்த அன்பர்கள் அரும்பாடு பட்டு , அம்மையார் திருப்பணி செம்மல் திருமதி மகாலக்ஷ்மி சுப்பிரமணியன் அவர்கள் உதவியுடன் இத்திருக்கோயிலை சீரமைத்து நாம் அனைவரும் பயன் பெரும் வண்ணம் தந்துள்ளார்கள். 

இத்தலம் தன்னிகரில்லா சிறப்புகள் பல வாய்ந்தது ...

⧭ திருஞானசம்பந்தர் போற்றிய வைப்பு தலம் 
⧭பஞ்ச பாண்டவர்களில் பீமன் பூசித்த தலம் 
⧭சந்தான பாக்கியம் அருளும் ஒப்பற்ற தலம் 
⧭மானசீக பூசையே உயர்ந்தது என உணர்த்திய தலம் 
⧭நம் மனக்குறைகளை செவிமடுக்கும் விதமாக இறைவன் சற்றே தலை சாய்ந்து இருக்கும் தலம் 
⧭1300 வருடங்கள் பழமையான தலம் ...
⧭ இறைவன் திருமேனி சதுரஸ்வரம் விரத்தம் என்ற அரிய வடிவம் கொண்ட தலம் .
⧭பீமேஸ்வரம் என்று வழங்கப்படும் தலம் 

எங்குள்ளது கொத்தங்குடி ?

நம் தஞ்சை தரணியில் , கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயிலுக்கு 2 கிலோமீட்டர் கிழக்காக அரிசிலாற்றுக்கும் திருமலைராஜன் ஆற்றுக்கும் இடையே பச்சை பசேல் என வயல்கள் சூழ அமைந்துள்ளது இத்தலம் .....


மற்றொரு தேவார வைப்பு தலமான திரு நல்ல கூரூர் எனப்படும் கூகூர் மிக அருகில் உள்ளது .

பேருந்து நிறுத்துமிடம் : ஆத்துப்பாலம் கொத்தங்குடி 

திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் :

 காலை 7.00 -------11.00
மாலை 6.00 -----8.30

பரிகாரம் செய்யும் நேரம் 

காலை 9..00---10.30
மாலை 6.30 ----7.30 (சனிக்கிழமை நீங்கலாக)

அர்ச்சகர் அருகிலேயே வசிக்கிறார் ...
அலைபேசி எண் : 8903867919

அன்பர்களே ! மழலை பாக்கியம் மட்டுமே அருள்வார் என்று மற்றோர் வாளாவிருந்துவிட வேண்டாம் .

 கருவறையில்  ஒளி பொருந்திய  பிரமாண்டமான திருமேனியராக வீற்றிருக்கும் சுந்தரேஸ்வர பெருமானை கண்ட  மாத்திரத்தில் நம் துன்பங்கள் யாவும் பகலவனை கண்ட பனிபோல் மறையும் அதிசயத்தை நீங்கள் இங்கு வந்து இப்பெருமானை வணங்கும்போது உணர்வீர்கள் 


இது நிச்சயம் .....

முன்பிருந்த நிலை :







தற்போதைய நிலை :







Friday, July 19, 2019

கன்னட மாத்வர்கள் சாதித்தனர் ......

கண் இமைக்கும் நேரத்தில் சீரமைக்கப்பட்ட வ்யாஸராஜ தீர்த்தரின் ஜீவ பிருந்தாவனம் ....!

அன்பர்களே......!

இதே ஒற்றுமை உணர்வு , இறை உணர்வு , சிரத்தை , சமய பற்று , அக்கறை யை நாமும் பின்பற்றினால் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பொக்கிஷங்களான , ஏராளமான திருக்கோயில்களை நாமும் சீரமைத்து நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கலாம் .....

அன்பர்களே ...!

ஆயிரம் இலைகள் ஒரு மலருக்கு சமமாகாது ......வானுற கட்டடங்கள் ஒரு திருக்கோயிலுக்கு ஈடாகாது ....
வாருங்கள் ......கஜா புயலினால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஒரு திருக்கோயிலின் சீரமைப்பிற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் ......

திருவாரூர் மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி வட்டம் ஆப்பரக்குடி அமிர்தலிங்கேஸ்வரர் திருக்கோயில் ....

இயற்கையின் கோர தாண்டவத்தினால் நிர்மூலமாக்கப்பட்ட இத்திருக்கோயிலை மீட்க களம் இறங்கியுள்ளனர் ஓம்காரம் மன்ற குழுவினர் ....

அலைபேசி எண்கள் தந்துள்ளேன் ..
வரும் ஆவணியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருப்பதால் , விரைந்து பணிகளை முடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ...

தேவைப்படும் பொருட்கள் 

பணி நிறைவு செய்திட சிமெண்ட் 50 மூட்டை, (ரூ17.500), மணல் 15000, லேபர் 2000x 10 நாள் ( 20000), சுற்றுச்சுவர் அமைக்க இயலாத நிலையில் கம்பி வேலி அமைக்க ரூ.30000 தேவைப்படுகிறது.   ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ 350 மட்டுமே..


அன்பர்கள் தங்களால் இயன்ற அளவு சிமெண்ட் மற்றும் மணல் உதவி செய்து  கும்பாபிஷேகம் நடைபெற உதவிட வேண்டுகிறோம்.

அருகில் உள்ள  தேவார பாடல் பெற்ற திருக்கோயில் கச்சனம் 

ஓம்காரம் இறைபணி மன்றம். 9095265980, 8678900455

இந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை நீங்கள் அளிக்கலாம் ..
வங்கி கணக்கு விபரங்களும் அளிக்கப்பட்டுள்ளது  வங்கி கணக்கு எண் : 257001001917247
CITY UNION BANK
Thiruthuraipoondi Branch

IFSC CODE : CIUB0000257

அன்பர்களே ...! திருப்பணியில் ஈடுபட்டிருப்போர் பெரும் தனவந்தர்கள் அல்லர் ..

ஆன்மீக பற்று கொண்ட சாமான்யர்களான அந்த இளைஞர்களுக்கு உதவுவது நம் கடமை.



Thursday, July 11, 2019

வயலநல்லூர் பெருமான் இருக்க  வாட்டம் எதற்கு ?

சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களே ....
தனி ஒரு மனிதனால்  , தன் உத்தியோகத்தை துறந்து , உடமைகளை இழந்து சிவப்பணி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு , அடியார்கள் சிலரது பொருள் உதவியுடன் , மிக மிக மெதுவாக எழும்பி வரும் திருக்கோயில் இது .....

அன்பர்களே ........
இரு கைகள் சேர்த்தாலும் அணைக்க முடியாத மிகப்பருத்த திருமேனியை கொண்ட சுயம்பு லிங்கம் ...
உளிகொண்டு செதுக்காத பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் பேரழகு வாய்ந்த பெருமான் ,சக்தி முற்றேஸ்வரர் என்னும் திருநாமம் ....அன்னை பெரியநாயகி ...

இப்பெருமான் பல்லாண்டு காலமாக இப்பகுதியில் வானமே கூரையாக அருள்பாலித்து வந்தார் ....
பின் மேற்கூரை இடப்பட்டது ....பின் புயலினால் அதுவும் பிய்த்துக்கொண்டு போய்விட மறுபடியும் நந்தியெம்பெருமானுடன் இறைவன் தனித்து விடப்பட்டார் .....

அப்போதெல்லாம் தன் குடும்பத்தாருடன் இப்பெருமானை பூசை புனஸ்கரங்கள் செய்து , கவனித்து வந்தது இந்த அடியார் தான் ....(அலைபேசி எண் தந்துள்ளேன் )

இப்பெருமானின் நிலை கண்டு பொறுக்காத இவர்   அடியார்கள் சிலரது சீரிய முயற்சியின் துணை கொண்டு பெரும்பாடு பட்டு திருக்கோயிலை கட்டி வருகிறார் .....

இத்திருக்கோயிலின் இன்றைய நிலையை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் 

அன்பர்களே ....இனியும் காலம் தாழ்த்தாது திருக்கோயிலை விரைந்து முடித்து ,குடமுழுக்கையும் நடத்தியாக வேண்டும். அதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் தேவை ....

இப்பெருமானை தரிசித்த அந்த நொடியிலேயே நம் துன்பங்கள் , பூர்வ ஜென்ம ,நிகழ்கால வினைகள் யாவும் பகலவனை கண்ட பனி போல் மறையும் ....துளியும் சந்தேகமில்லை, மிகையில்லை.
அன்பர்களே.......இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணரலாம் ....


இங்கு முருகன் கோவில் ஒன்றும் புகழ் பெற்று விளங்குகிறது ....இவர் சுமார் எட்டடி உயரம் கொண்டவர் .....வள்ளி தேவயானை இன்றி தனித்த கோலம் ...காண்பதற்கரிய திருமேனி .
இருப்பிடம் :  
வயலநல்லூர் சென்னை திருவள்ளூர் பேருந்து மற்றும் புகைவண்டி பாதையில் பட்டாபிராம் ----பூந்தமல்லி (தண்டுறை வழியாக) பாதையில் உள்ளது .

பட்டாபிராமில் இறங்கி பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ உதவியுடன் வசதியாக சென்று வரலாம் .
மற்றொரு பாதையும் உள்ளது ....ஆவடி காமராஜ் நகர்  வழியாகவும் வயலநல்லூரை அடையலாம் .

வாங்கி கணக்கு எண் மற்றும் அடியார் திரு அசோக் அவர்களின் அலைபேசி எண் தந்துள்ளேன் ..

கொடுத்து வைத்தவர்கள் சென்று தரிசனம் செய்யுங்கள் ......
தங்கள் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பயன் விளைய விரும்புபவர்கள் திருப்பணியில் பங்குபெருங்கள் 

G. Ashok 
MOB.NO. 9566113363

SB A/C NAME : ASHOK

SB A/C No 603574539

IFSC CODE :  IDIB000P046

INDIAN BANK 
Poonamallee Branch 
Trunk Road









Saturday, March 30, 2019

நலிவடைந்த திருக்கோயில்களை  வழிபடலாமா?
வானமே கூரையாக தனித்து விடப்பட்ட திருமேனிகளை வழிபடலாமா?

அன்பர்களே ....இந்த சந்தேகம் இல்லாதவர்களே இல்லை .....

அன்பர்களே ...நீங்கள் நடந்து செல்லும் வழியில் ஒரு 2000  ருபாய் தாள் ஒன்றுஅனாமத்தாககிடக்கிறது என்றுவைத்துகொள்ளுங்கள்....அவ்வளவு வேண்டாம் ஒரு 500 ருபாய் நோட்டு ...ஒரு 10 ருபாய் ..அது ஒரு ரூபாயாகவே இருந்தாலும் , நம் மனம் எவ்வளவு அலைபாய்கிறது சுற்றிலும் இருப்பவர்கள் யாரவது பார்க்கிறார்களா என்று?

நம் மனதிற்கு தெரியும் அது மதிப்பு மிக்கது என்று ..அதை குப்பையில் கிடைப்பதால் வெறும் தாள் என்று ஒருவரும் ஒதுக்குவது இல்லை ..

ஆனால் ஏன் இறைவனின் மகிமையை மட்டும் சந்தேகிக்கிறோம் ? அவர் தனித்து விடப்பட்டால் ...அவரும் நம் மதிப்பிற்கும் , வழிபாட்டிற்கும் உரியவரே ......குப்பையில் கிடைப்பதால் வைரம் கரிக்கல்லாக மாறிவிடாது ..   

இது உண்மை என்று உங்கள் மனதிற்கு பட்டால் வாருங்கள் அத்தகைய 
திருமேனிகளை சரிசெய்து , விஷ்ணுபாகம் எனப்படும் ஆவுடையார் அமைத்து , நந்தியெம்பெருமானை பிரதிஷ்டை செய்து , குறைந்த பட்ஷம் மேற்கூரை இட்டு , அப்பெருமானை வழிபாட்டிற்கு கொண்டு வர ப்ரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள் இம்மன்றத்தினர் ......

அன்பர்களே ...இப்பெருமான்கள் ஒன்றும் திடீரெனெ முளைத்து விடவில்லை ..பல்லாண்டு காலங்களாக பல்வேறு ரிஷிகளாலும் , மகான்களாலும் ,முனிவர்களாலும் ,தேவார மூவர்களாலும் வழிபட பெற்று பேரரசர்களால் கட்டப்பட்ட திருக்கோயில்களில் குடிகொண்டு அருளாட்சி செய்து , பின்னர் காலமாற்றங்களினாலும்  , நம் அசிரத்தையினாலும் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை  ..

நம் கடமை என்ன?

இத்தகைய அரிய செயலை செய்வோர்க்கு உதவிக்கரம் நீட்டுவது, பலருக்கும் தெரியப்படுத்துவது  நம் கடமை ...
இதனால் நாம் மட்டுமின்றி நம் சந்ததியினரும் பெரும் பலனை அடைவார்கள் ...சிவ திருப்பணிக்கென ஒரு செங்கல்லை வழங்கினாலே நம் குலம் தழைத்தோங்கும் ...வாழ்வாங்கு வாழும் ....

கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை

அலைபேசி எண்கள் 9444 352848/ 9677226260

திரு ஜெயபாலன் அலைபேசி எண் 99410 45123
இந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் ... மேற்கூரை அற்ற பெருமான்களுக்கு திருப்பணி செய்ய உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் தேவை ..... மதுராந்தகம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள திருமேனிகள் உங்கள் பார்வைக்காக





விச்சூர் கிராமம் செங்கல்பட்டு ---காஞ்சிபுரம் அருகில் இவர்களது திருப்பணி .....

திருப்பணிக்கு முன்பிருந்த நிலை

முகநூல் பக்கம்

Friday, March 22, 2019

நீங்காத செல்வ வளம் பெருக , தம்பதியர் பிணக்குகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ

வாருங்கள் நின்றவூர் லட்சுமி புரீஸ்வரரின் அருளை பெற்று வரலாம் .....

எங்குள்ளது ?  

திருவள்ளூர் மாவட்டம் சென்னை -திருவள்ளூர் பேருந்து மார்க்கத்தில் (ஆவடி வழி)திருநின்றவூர் உள்ளது .... 

108 திவ்ய ஷேத்திரத்தில் ஒன்றான, புகழ் பெற்ற  பக்த வத்சல பெருமாள் திருக்கோயில் இங்கு உள்ளது.
இதய நோய்கள் நீக்கும் பரிகார தலமான இருதயாலீஸ்வரர் திருக்கோயிலும் இங்கு தான் உள்ளது ..
பூசலார் நாயனார் பிறந்து வளர்ந்து இவரால் வழிபட பெற்ற கைலாசநாதர் திருக்கோயிலும் இவ்வூருக்கு புகழ் சேர்க்கிறது .(இத்திருக்கோயில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது )

தல புராணம் 

சந்தர்ப்பவசத்தால் தன் கணவனான திருமாலை பிரிந்த மஹாலக்ஷ்மி , இத்தலத்தில் சிவபெருமானை நின்றபடியே தியானித்து , தவம்புரிந்து ,பின் அவர் அருளால் தன் பதியை அடைந்ததால் , இப்பெருமான் 
லட்சுமிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் ..

திருவாகிய மகாலக்ஷ்மி நின்றபடி தவம் புரிந்த இடமாகையால் இத்தலம் திருநின்றவூர் ஆயிற்று .

இப்பெருமானை உள்ளன்போடு வழிபடுவதால் வறுமை அகலுவதோடு , பிரிந்திருந்த கணவன் மனைவியர் மீண்டும் வாழ்க்கையில் ஒன்றிணைவர் என்பது திண்ணம் ...

ஆனால் அன்பர்களே .....இப்பெருமான் இருப்பதே இப்பகுதி மக்கள் அறியாதது தான் சோகம் .
ஏனெனில் , இப்பெருமான் பக்தவத்சல பெருமாள் கோயில் அருகில் புதர் மண்டிய ஒரு இடத்தில் பல காலமாக பூசைகள் இன்றி இருந்தார்.  பின்னர் பக்தர்கள் முயற்சியின் பேரில் இக்கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் கன்னிமார் கோயில் எனப்படும் கன்னியம்மன் கோயில் வளாகத்தில் மிகச்சிறிய ஒரு இடத்தில் தற்போது கோயில் கொண்டுள்ளார் ....

கன்னியம்மன் கோயில் பக்தவத்சல பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் எல்லம்மன் கோயில் எதிரில் ஒரு சிறிய சந்தில் உள்ளது ...

அன்பர்களே ...கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவார்கள் ...என்பார்கள் .அதுபோன்று நம்மிடையே உள்ள புராதன பெருமை மிக்க திருக்கோயில்களை நாம் அறியாமல் உதாசீனம் செய்கிறோம் ....எங்கெங்கோ அலைகிறோம் ....நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குகிறோம்...

இப்பெருமானை தொடர்ந்து திங்கட்கிழமைகளில் வில்வ இலைகளால் அர்ச்சிப்போருக்கு வறுமை அறவே நீங்கி செல்வ வளத்தோடு திகழ்வார்கள் என்பது உறுதி . எனவே பண பிரச்சனைகளால் அவதி உறுவோர் இப்பெருமானை வணங்கி வரலாம் .....

திருநின்றவூர் ரயில் நிலையத்திலிருந்து இத்திருக்கோயில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது .ஷேர் ஆட்டோ வசதி நிறைய உள்ளது .

திறந்திருக்கும் நேரம்: இரும்பு கம்பிகளின் இடைவெளியில் எப்போதும் காணலாம் .


இத்திருக்கோயில் புராண வரலாறுகளை பற்றி விரிவாக அறிய aadhav101.blogspot.com/  என்ற வலைத்தளத்தை நீங்கள் நாடலாம் .


Sunday, February 10, 2019

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா !!!!!!
அதிசயம் , அபூர்வம் .....ஆனால் உண்மை .....

முற்றிலும் மங்கையர் முயற்சியால் கட்டப்பட்டு , பராமரிக்கப்பட்டு, பூசிக்கப்பட்டு வரும் திருக்கோயில் இது .
இங்கு அனைத்து பூசைகளும் பெண்களாலேயே செய்யப்படுகின்றன .

பெண்கள் எவ்வாறு கருவறையில் பூசை செய்யலாம் ?  ஆகம விதி ..அது ...இது ....என்று நீங்கள் யோசிக்க துவங்குமுன் வாருங்கள்....கீழ்க்காணும் பதிவு உங்களுக்காகத்தான் ...

இந்திரன் மற்றும் அக்னியால்  வழிபட பெற்ற 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுயம்பு லிங்கத்திருமேனி சுமார் 6 அடி உயர பாண லிங்கமாக இப்பகுதியில் முட்புதரில் பல ஆண்டுகளாக பூசை புனஸ்காரங்கள் இன்றி 
வானமே கூரையாக காணப்பட்டார் .....

ஒருவரும் கண்டு கொள்ளாத நிலையில் அருகில் வாழ்ந்து வந்த பெண்கள் சிலர் ஒன்று கூடினர் .ரூபாய் 5 ற்கும் 10 ற்கும் கையேந்தி , அனைவரிடமும் யாசித்து யாசித்து , மிகுந்த அவமானங்களுக்கிடையில் சற்றும் மனம் தளராமல் இறைபணி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சிறுக சிறுக சேர்த்து இப்பெருமானுக்கு சிறிய திருக்கோயில் ஒன்றை அமைத்துள்ளனர் ..

கடும் மழை  காலத்திலும் நான்கு கம்புகளை நட்டு , சில  தென்னை ஓலைகளை கூரையாக  வேய்ந்து , தங்கள் கொட்டும் மழையில் நனைந்த படி இப்பெருமானை இவர்கள் பூசித்துள்ளனர்.

கொட்டும் மழையாக இருப்பினும் , கடும் பனி வெயில் காலங்களிலும் இவர்கள் இப்பெருமானை பூசிப்பதை மட்டும் விடவில்லை ..
இன்றும் இப்பெருமானை ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் என்ற சுழற்சி முறையில் 10 குடும்பங்கள் இறைவனை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து கவனித்து வருகிறார்கள் .....
தினசரி செலவு ருபாய் 150 + ஒரு நைவேத்தியம் . இதன்படி பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் தவறாமல் நடைபெறுகிறது .  சிவராத்திரி அன்று 4 கால விசேஷ அபிஷேகங்களும் உண்டு .
இதன் செலவுகளும் அருகில் வாழும் இப்பெண்களின் குடும்பங்கள் தான் ஏற்றுக்கொள்கிறது .
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இப்பெண்கள் உதாரணம் ...
பலமுறை ஆண் அர்ச்சகர்களை நியமித்தும் , அவர்கள் ஒருவரும் இங்கு நிலைத்து இருந்ததில்லையாம் .
மாதொரு பாகன் இப்பெண்களின் பூசையை மனமுவந்து ஏற்றுக்கொன்கிறான் போலும் !!! 

சரி ....!   எங்குள்ளது இத்திருக்கோயில் ?  நாம் என்ன செய்ய வேண்டும் ...

திருவள்ளூர் மாவட்டத்தின் தொழிற்பேட்டையான காக்களூர் திருகாரணீஸ்வரர் ( இத்திருக்கோயில் பிரதான சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது ) திருக்கோயில் அருகிலேயே சற்றே உள்ளடங்கிய பகுதியில் 
சிவசக்தி விநாயகர் கோயில் அடுத்து இத்திருக்கோயில் உள்ளது .....எளிதில் விசாரித்து அடையலாம் ...

இத்திருக்கோயில் காலை 5.30 மணிக்கே திறக்கப்பட்டு இரவு 9.30 மணி வரையில் மூடப்படாது இருக்கும் .
ஆன்மீக அன்பர்களே ......பெறற்கரிய இத்திருக்கோயிலை பெண்கள் பெரும்பாடு பட்டு கட்டிய இத்திருக்கோயிலை வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று தரிசியுங்கள் !!!!! 

இறைவன் திருப்பெயர் அக்னீஸ்வரர் ...அன்னை அபிராமி 

உங்களால் இயன்றதை பூசை பொருட்களாகவோ , பொருளாகவோ தந்து வளையல் கரங்களுக்கு வலு சேருங்கள் .....
இந்திரனுக்கும் கிடைக்காத மாபெரும் பேறு  பெற்ற இப்பெண்கள் வானுறையும் தெய்வத்துள் வைத்து போற்றப்படுவர் என்பது உறுதி 





Sunday, January 27, 2019

வேதங்கள் வழிபட்ட வேதநாயகன் 

சகல தோஷங்களையும் நீக்கும் பரசுராம ஷேத்திரம் 
பித்ரு கடன்களை நிறைவேற்ற உகந்த தலம் 
மஹாலக்ஷ்மி வழிபட்ட மகத்தான தலம் 
இரும்பு சம்பந்தப்பட்ட கனரக தொழில் முனைவோர் விரும்பி வழிபட வேண்டிய தலம் 
நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்த  ,முக்தி பெற்ற தலம் 
ஜைமினி மகரிஷி சாம வேதத்தை 1000 சாகைகளாக பிரித்து அருளிய தலம் 
சந்தர்ப்பவசத்தால் ஏழ்மை நிலை அடைந்தவர்கள் மீண்டும் இழந்த செல்வத்தை அடைய வழிபட வேண்டிய தலம் .......

அன்பர்களே இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இத்திருக்கோயிலின் பெருமையை ...

பரசுராமர் தன தாயை கொன்ற பாவம் நீங்கவும் , சண்டேசர் தன தந்தையை கொன்ற பாவம் போகவும் இங்கு வந்து சாம வேதீஸ்வரரை வழிபட்டுள்ளனர் ..

குபேரனும் இங்கு வழிபட்டுள்ளதாக தல புராணம் குறிப்பிடுகிறது ...

அன்பர்களே பெறற்கரிய இத்திருக்கோயிலை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருநாளேனும் வணங்கி அருள்பெற வேண்டாமா..? 

வாருங்கள் திருமங்கலம் லோகநாயகி உடனுறை சாமவேதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ..திருச்சி மாவட்டம் , லால்குடி வட்டம் தேவார பாடல் பெற்ற மாந்துறை அருகில் உள்ளது திருமங்கலம் கிராமம் .

இத்திருக்கோயில் காலை 7 மணியிலிருந்து 11,30  மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும் ...அலைபேசி எண்களும் தந்துள்ளேன் ..

லால்குடி யிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது ..சுற்றிலும் ஏராளமான தலங்கள் சூழ நடுநாயகமாக ஒரு ஆன்மீக பொக்கிஷமாக இத்திருக்கோயில் விளங்குகிறது 

அன்பர்களே கருவறையில் ஒளிபொருந்திய கம்பீரமான திருமேனி கொண்டு விளங்கும் சாமவேதீஸ்வரரை தரிசித்த மாத்திரத்தில் நம் துன்பங்கள் பறந்தோடும்...

அபய ஹஸ்த குருபகவான் , வடக்கு நோக்கிய காக வாஹனம் உடைய சனிபகவான் இத்தலத்தின் மற்றுமோர் சிறப்பாகும் ...

பித்ரு தோஷம் உடையவர்கள் இத்திருக்கோயில் வந்து வணங்க அவர்கள் பித்ரு தோஷத்திலிருந்து முழுமையாக விடுபடுவர் என்பது ஆன்றோர்கள் வாக்கு .....

குருக்கள் :பாலசுப்பிரமணிய சிவா 
98654 22027

ஞானஸ்கந்த குருக்கள் 

0431--2541040 , 97100 64571





Saturday, January 19, 2019

அண்டியவர் துயர் தீர்க்கும் அச்சுதமங்கலம் திருக்கோயில்கள் 
(இழந்ததை மீண்டும் பெரும் பரிகார தலம் )

பஞ்ச பாண்டவர்கள் தனித்தனியே ஸ்தாபித்த ஐந்து திருக்கோயில்கள் 
அவற்றுள் மூன்று மட்டுமே இன்று காண கிடைக்கிறது 
அவையும் தற்போது எவ்வாறு உள்ளது ?
இத்திருக்கோயில்களின் பெருமை என்ன?
வாருங்கள் ....தெரிந்து கொள்வோம் பெறற்கரிய இத்திருக்கோயில்களின் நிலை பற்றி ...

 புகழ்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே , 2 கிலோமீட்டர்  தூரத்தில் குடந்தை நன்னிலம் சாலையில் உள்ளது அச்சுதமங்கலம் எனும் ஊர் ...

பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இத்தலத்தில் தங்கி இங்கு ஐவரும் சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்பது வரலாறாகும் ..
பின்னர் ஆட்சி செய்த சோழ மன்னர்களால் பிரம்மாண்டமாக திருக்கோயில்கள் அமைக்கப்பட்டன  எனினும் அர்ச்சுனனை பிரதானமாக கொண்டு இவ்வூரை அர்ச்சுனன்மங்கலம் என்று அழைக்கப்பட்டது .
இன்று அச்சுதமங்கலம் என்று வழக்கில் உள்ளது .

மற்ற இரு திருக்கோயில்கள் காலப்போக்கில் முற்றிலும் அழிவுற்றதால், இக் கிராமத்தி  வெவ்வேறு இடத்தில்கிடைக்கப்பெற்ற இரு லிங்கத்திருமேனிகள் சகாதேவனாலும் , நகுலனா லும் வழிபட பெற்றவை என நம்பப்படுகிறது ..


இவை சோமநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

அச்சுதமங்கலம் கோயில்கள் 1.சோமநாதர் ஆலயம் 

அளவிலும் பரப்பிலும் பெரிய கோயில் இது .பெரிய கோயில் என்றே அழைக்கிறார்கள்.
மூற்றாம் குலோத்துங்கன் கட்டிய கோயில். மூலவர் சோமநாதர் . அம்பாள்:சௌந்தர்ய நாயகி.

வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி சிற்பங்கள் எங்கும் காண முடியாதவை.

ஆனால்அழிவின் பிடியில் இருந்து இந்த கோவிலும் தப்பவில்லை 

பக்தர்கள் வருகை குறைவு, வருமானம் இன்மையால் அரசின் பார்வை இன்னமும் அச்சுதமங்கலம்கோயில்கள் மீது படவில்லை.
அன்பர்களே ஸ்ரீவாஞ்சியம் செல்பவர்கள் அச்சுதமங்கலம் சென்று இக்கோயில்களையும் தரிசனம் செய்துவாருங்கள்.





அச்சுதமங்கலம் கோயில்கள் 2.

தர்மேஸ்வரர் திருக்கோயில் 

அம்பாள் : தர்மேச்வரி 


அன்பர்களே திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலம் கிராமம், யம பயம் நீக்கும் பரிகார தலமான ஸ்ரீ வாஞ்சியத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஷேத்திரமாகும்.

பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமையை உடையது. 3 சிவஸ்தலங்களையும் 1 பெருமாள் கோயில் உட்படபல திருகோயில்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

அவற்றில் ஒன்று தருமர் வழிபட்ட தர்மேஸ்வரர் கோயில். மிகவும் சிதிலமைந்து உள்ளே செல்லவும் அச்சமாக உள்ளது, எங்கே இடிந்து விழுந்து விடுமோ என்று.


அம்பாளின் திருவுருவம் இன்றெல்லாம் காணலாம். அவ்வளவு அழகு







அச்சுதமங்கலம் கோயில்கள் 3.


காசி விஸ்வநாதர் கோயில்
இத்திருக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது .
பெரிய கோவில்  அருகிலேயே இத்திருக்கோயில் உள்ளது .
விசாரித்து எளிதில் அடையலாம் ..

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுதமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதரை வழிபட, வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.





காண்டக்ட்: R .மோகன் 9524348725
 —





அன்பர்களே பொருளை இழந்துவிட்டால் மீண்டும் பெற்று விடலாம் ..
பெறற்கரிய இத்திருக்கோயில்களை இழந்து விட்டால் ?
மீண்டும் பெற இயலாது ....
எனவே சென்று தரிசனம் செய்யுங்கள்.

இயன்றதை செய்யுங்கள் இல்லாத திருக்கோயில்களுக்கு ...