Saturday, April 17, 2021

கோடி கொடுத்தாலும் கிடைத்தற்கரிய கூளூர் பெருமானின் தரிசனம் ..

அன்பர்களே அதிசயம், அற்புதம் என்று எந்தனை வார்த்தைகளால் விவரித்தாலும் அது மிகையில்லை.

16 பேறுகளையும் அளிக்கும் 16 பட்டைகளை கொண்ட பெரிய திருமேனி .
தரிசிக்கும் அனைவரையும் ஒரு கணம் சிலிர்க்க வைக்கும்

அவன் அருள் கிடைக்கப்பெற்ற மிகச்சிலரே இப்பெருமானை தரிசித்துள்ளனர் ...
உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் ...

எங்குள்ளது கூளூர் ?
திருவள்ளூர் மாவட்டம் , திருவாலங்காடு ஒன்றியம் , திருவள்ளூர் திருத்தணி செல்லும் பாதையில் 14 கிலோமீட்டர் தொலைவில் ராமஞ்சேரி அடுத்து கூளூர் பேருந்து நிறுத்தம் வரும் .அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இப்பெருமான் கூரையில் குடி கொண்டுள்ளார் .

அருகில் ராமஞ்சேரியில் வசிக்கும் அடியார் வேலு அவர்கள் குடும்பத்தினர் இப்பெருமானுக்கு சேவை செய்து வருகின்றனர் .
பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது . அன்பர்களே இவர்தம் சிவபக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது .... தற்காலத்தில் கருவறை உள்ளேயே குழாய் பதித்து கொள்கின்றனர் வசதிக்காக . ஆனால் இவர்களோ வெகு தூரத்தில் இருந்து வண்டியில் அபிஷேக நீர் எடுத்து வந்து இறைவனுக்கு அபிஷேகிக்கின்றனர் . பால் , பன்னீர் மற்றும் இதர பொருட்களால் இவருக்கு செய்யப்படும் அபிஷேகம் 16 பட்டைகளின் வழியே வரி வரியாய் இறங்குவது மெய் சிலிர்க்கும் காட்சியாகும் ..
மக்கள் வருகை இல்லை ...காட்டு பகுதி என்பதால் வசதிகள் இல்லை என்றெல்லாம் எண்ணாமல் இப்பெருமானை இவர்கள் உளமார பூசிப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது .... பெருமான் இந்த அடியாரை ஆட்கொண்டதே தனி கதை ....

காடு போன்று வனாந்திரமாக உள்ளது பெருமான் எழுந்தருளியிருக்கும் பகுதி .
எனினும் பிரதான சாலையிலிருந்து அரை கிலோமீட்டரே உள்ளது என்பதால் விசாரித்து எளிதில் அடைந்து விடலாம் .. திரு வேலு அவர்களின் அலைபேசி எண் தந்துள்ளேன் ..இவர் அருகில் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராமஞ்சேரி என்னும் இடத்தில் வசிக்கிறார் .தரிசனம் செய்ய உதவுவார் . ராமஞ்சேரியிலும் மிக புராதனமான சிவத்தலம்ஒன்று உள்ளது .

அடியார்கள் கவனத்திற்கு :

இப்பெருமானது பெயரோ , தல புராணங்களோ , அல்லது செவி வழி செய்திகளோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை

இப்பகுதியில் மேலும் 4, 5 திருமேனிகள் வழிபாடின்றி , வயல் வெளிகளில் கேட்பாரற்று கிடப்பதாக கூறுகிறார்கள் .

அன்பர்களே கைடைசியாக ஒன்று ..... சென்று தரிசனம் செய்யுங்கள் ..... திரு வேலு அவர்கள் குடும்பத்தினர் தனியாக இப்பணியை செய்து வருவதால் அவர் தம் கரத்திற்கு வலு சேர்க்க நீங்கள் விரும்பினால் ....பூசை பொருட்கள் , எண்ணெய் வாங்கி தந்து உதவலாம் ..நந்தியெம்பெருமான் கூரை இல்லாமல் உள்ளார், அவருக்கு கூரை அமைத்து தரலாம் ..
நீங்கள் செய்யும் சிறு உதவியும் மகேசனை நேரடியாக சென்றடையும் என்பது திண்ணம்

திரு வேலு : 9894590161

அடியார் வேலு அவர்களின் புதல்வர் கைவண்ணத்தில் மிளிரும் பெருமான் இதோ உங்களுக்காக...