Sunday, February 10, 2019

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா !!!!!!
அதிசயம் , அபூர்வம் .....ஆனால் உண்மை .....

முற்றிலும் மங்கையர் முயற்சியால் கட்டப்பட்டு , பராமரிக்கப்பட்டு, பூசிக்கப்பட்டு வரும் திருக்கோயில் இது .
இங்கு அனைத்து பூசைகளும் பெண்களாலேயே செய்யப்படுகின்றன .

பெண்கள் எவ்வாறு கருவறையில் பூசை செய்யலாம் ?  ஆகம விதி ..அது ...இது ....என்று நீங்கள் யோசிக்க துவங்குமுன் வாருங்கள்....கீழ்க்காணும் பதிவு உங்களுக்காகத்தான் ...

இந்திரன் மற்றும் அக்னியால்  வழிபட பெற்ற 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுயம்பு லிங்கத்திருமேனி சுமார் 6 அடி உயர பாண லிங்கமாக இப்பகுதியில் முட்புதரில் பல ஆண்டுகளாக பூசை புனஸ்காரங்கள் இன்றி 
வானமே கூரையாக காணப்பட்டார் .....

ஒருவரும் கண்டு கொள்ளாத நிலையில் அருகில் வாழ்ந்து வந்த பெண்கள் சிலர் ஒன்று கூடினர் .ரூபாய் 5 ற்கும் 10 ற்கும் கையேந்தி , அனைவரிடமும் யாசித்து யாசித்து , மிகுந்த அவமானங்களுக்கிடையில் சற்றும் மனம் தளராமல் இறைபணி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சிறுக சிறுக சேர்த்து இப்பெருமானுக்கு சிறிய திருக்கோயில் ஒன்றை அமைத்துள்ளனர் ..

கடும் மழை  காலத்திலும் நான்கு கம்புகளை நட்டு , சில  தென்னை ஓலைகளை கூரையாக  வேய்ந்து , தங்கள் கொட்டும் மழையில் நனைந்த படி இப்பெருமானை இவர்கள் பூசித்துள்ளனர்.

கொட்டும் மழையாக இருப்பினும் , கடும் பனி வெயில் காலங்களிலும் இவர்கள் இப்பெருமானை பூசிப்பதை மட்டும் விடவில்லை ..
இன்றும் இப்பெருமானை ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் என்ற சுழற்சி முறையில் 10 குடும்பங்கள் இறைவனை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து கவனித்து வருகிறார்கள் .....
தினசரி செலவு ருபாய் 150 + ஒரு நைவேத்தியம் . இதன்படி பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் தவறாமல் நடைபெறுகிறது .  சிவராத்திரி அன்று 4 கால விசேஷ அபிஷேகங்களும் உண்டு .
இதன் செலவுகளும் அருகில் வாழும் இப்பெண்களின் குடும்பங்கள் தான் ஏற்றுக்கொள்கிறது .
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இப்பெண்கள் உதாரணம் ...
பலமுறை ஆண் அர்ச்சகர்களை நியமித்தும் , அவர்கள் ஒருவரும் இங்கு நிலைத்து இருந்ததில்லையாம் .
மாதொரு பாகன் இப்பெண்களின் பூசையை மனமுவந்து ஏற்றுக்கொன்கிறான் போலும் !!! 

சரி ....!   எங்குள்ளது இத்திருக்கோயில் ?  நாம் என்ன செய்ய வேண்டும் ...

திருவள்ளூர் மாவட்டத்தின் தொழிற்பேட்டையான காக்களூர் திருகாரணீஸ்வரர் ( இத்திருக்கோயில் பிரதான சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது ) திருக்கோயில் அருகிலேயே சற்றே உள்ளடங்கிய பகுதியில் 
சிவசக்தி விநாயகர் கோயில் அடுத்து இத்திருக்கோயில் உள்ளது .....எளிதில் விசாரித்து அடையலாம் ...

இத்திருக்கோயில் காலை 5.30 மணிக்கே திறக்கப்பட்டு இரவு 9.30 மணி வரையில் மூடப்படாது இருக்கும் .
ஆன்மீக அன்பர்களே ......பெறற்கரிய இத்திருக்கோயிலை பெண்கள் பெரும்பாடு பட்டு கட்டிய இத்திருக்கோயிலை வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று தரிசியுங்கள் !!!!! 

இறைவன் திருப்பெயர் அக்னீஸ்வரர் ...அன்னை அபிராமி 

உங்களால் இயன்றதை பூசை பொருட்களாகவோ , பொருளாகவோ தந்து வளையல் கரங்களுக்கு வலு சேருங்கள் .....
இந்திரனுக்கும் கிடைக்காத மாபெரும் பேறு  பெற்ற இப்பெண்கள் வானுறையும் தெய்வத்துள் வைத்து போற்றப்படுவர் என்பது உறுதி