Tuesday, February 7, 2017

சிவநேய செல்வர்களின் சீரிய கவனத்திற்கு .....

ஞானிகள் , ரிஷிகள், மகான்கள் , சித்தர்கள் என பலராலும் வணங்கி வழிபட பெற்ற பல்லாயிரக்கணக்கான திருமேனிகள் , பின்னர் வந்த மாமன்னர்கள் பலரால் போற்றி பாதுகாக்கப்பட்டு ,பிரம்மாண்டமான திருக்கோயில்கள்  அமைக்கப்பட்டு , வழிபாடு செய்யப்பட்டு வந்தது .......

இன்று கால மாற்றங்களினாலும் , அந்நியர்கள் படையெடுப்பாலும் , அவை நிர்மூலமாக்கப்பட்டு சீர்குலைந்து ,பெருமான் தன்னந்தனியே , வானம் பார்த்த திருமேனியராய் , திருக்கோயில் இன்றி , வழிபாடின்றி 
ஏராளமான திருமேனிகள் நம் தமிழகத்தில் காண கிடைக்கின்றன .....

நமது பொறுப்பின்மையும் இதற்கு ஒரு காரணம் .....

அன்பர்களே .....இதோ இங்கே பாருங்கள் .....வீடு கட்டப்படுவதற்காக இப்பெருமான் சாலை ஓரத்திற்கு வந்து விட்டார் ..

எங்கே இருக்கிறார் இவர் ?  
திருவாரூர் மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி வட்டம்,நேமம் வங்க நகர் செல்லும் சாலையில் , இளநகர் என்னும் கிராமத்தில் தான் இவர் சாலை ஓரத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார் ......

விவசாய கூலி வேலை செய்யும் எளிய மக்கள் வசிக்கும் பகுதி இது .

இந்நிலை கண்டு வருந்திய சிவபீடம் அமைப்பினர் இப்பெருமானுக்கு  மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ....

இத்திருப்பணியில் நீங்கள் பங்கு பெற விரும்பினால் சிவபீடம் நிறுவனர் திரு சிவ . முத்துராமன் அவர்களை அவரது அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ....

சிவ முத்துராமன்( www.sivapeedam.org)

சிவபீடம் 9443390589





Monday, January 30, 2017

விடமுண்ட கண்டன் கொலு வீற்றிருக்கும் விடையபுரம் --திருவாரூர் மாவட்டம் 


அன்பர்களே, மிக மிக தூய்மையான எண்ணெய் பிசுக்கற்ற திருகோவிலை காண வேண்டுமா?
இறை திருமேனிகளின் வஸ்திரங்கள் , மடிப்பு கலையாமல் ,இஸ்திரி செய்யப்பட்டது போல் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருக்கும் அழகை காண உங்களுக்கு விருப்பமா?
கம்பீரமான மிகப்பெரிய இறைவுருவங்கள் கொலுவீற்றிருக்கும் திருகோயிலை பார்க்க விரும்புகிறீங்களா?
அனைத்திற்கும் மேலாக மகா பெரியவா ஆராதித்த மகத்தான சிவாலயத்தை காண ஆசையா?
அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டியது , திருவாரூர் மாவட்டம் , குடவாசல் வட்டம் , கொரடாச்சேரி( 4 கிலோமீட்டர் )அருகில் உள்ள விடயபுரம் கிராமத்திற்கு.

இச்சிறிய கிராமத்திலும் அதன் அருகிலும் எண்ணற்ற திருகோயில்கள் விளங்குகின்றன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட "திருவிடைவாய்" தலம் இதன் அருகில் தான் உள்ளது .

மிக்க வேதனை என்னவென்றால், இறைவன் அருள்செய்ய காத்திருந்தாலும், அவன் அருளை பெற பக்தர்கள் தயாராக இல்லை என்பதுதான் . அடியார் பெருமக்கள் அவசியம் காண வேண்டிய அற்புத திருகோயில் இது .

அர்ச்சகர் வீடு இத்திருகோயில் எதிரிலேயே அமைந்துள்ளது .

இப்பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்ட அன்பர் திரு குமார் கண்ணும்  கருத்துமாக இத்திருக்கோயிலை பேணி  வருகிறார் ....இவரது அலைபேசி எண் தந்துள்ளேன் ....

இவரிடம் தொடர்பு கொண்டு இத்திருக்கோயிலை நீங்கள்  வசதியாக தரிசனம் செய்யலாம் ...

இங்கு உறையும் மீனாட்சி கம்பீரமான பேரழகு பொருந்தியவள் ....
இவளுக்கு திரு குமார் அவர்கள் செய்யும் அலங்காரம் காண கண் கோடி வேண்டும் அன்பர்களே ....

தவற விடாதீர்கள் ....
கண் நோய்கள் தீர்க்கும் கண் கொடுத்த வணிதம் தலம் மிக அருகில் இருக்கிறது ....

சென்று பலன் அடையலாம் .

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விடையபுரம், கண்கொடுத்த வனிதம் அஞ்சல், கமலாபுரம் வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர்- 610102.
திரு குமார் அவர்கள்
Contact No: 98 65 70 66 51





Wednesday, January 25, 2017

ஆபத்துகளை களைவார் ஆபத்சகாய ஈஸ்வரர் ........

அன்பர்களே .....திருவள்ளூர் மாவட்டம் , திருவள்ளூர் ஆவடி மார்க்கத்தில் உள்ள புட்லூர் நிறுத்தத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தண்ணீர் குளம் கிராமம் .....

இங்கு பன்னெடுங்காலமாக வானமே கூரையாக வீற்றிருந்து அருள்பாலித்து வந்தார் ஸ்ரீ ஆபத்சகாய ஈஸ்வரர் ....
எத்தனை ஞானியர் , மகான்கள் வழிபட்டிருப்பர் இப்பெருமானை ?
இன்று அருகில் உள்ள அடியார் திரு உதயகுமார் அவர்கள் தினசரி பூசைகளை கவனித்து வருகிறார்....

இப்பெருமானுக்கு திருக்கோயில் அமைத்திட நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார் ......

பெருமான் திருவுளம் கனிந்திட தற்போது திருப்பணி துவங்கப்பட்டுள்ளது .....

இத்திருப்பணிக்கு பொருள் உதவி தேவை படுகிறது ......கிடைத்தற்கரிய இந்த சந்தர்ப்பத்தை அன்பர்கள் பயன் படுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறோம் ....ஏனெனில் சிவாலய திருப்பணி நம் ஜென்ம ஜென்மாந்திர பாவங்களை நீக்கக்கூடியது ....

வங்கி கணக்கு எண் கொடுக்கப்பட்டுள்ளது .....
M.udhayakumar  SBI bank thirunindravur branch A no 30330231064 IFSC code no
Ifsc code no SBI 010666

அலைபேசி எண் :9941496440



Wednesday, January 18, 2017

அற்புத பலன்களை அள்ளி  வழங்கும் அரிய திருக்கோயில்கள் 1

நவக்கிரஹ தோஷங்களை அடியோடு நீக்கும் திருத்தலம் .....
பிரம்மன் தான் பெருமானின் சிரசை கண்டதாக பொய்கூறியதால் ஏற்பட்ட தோஷத்தை இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி , இறைவன் பிரம்மபுரீஸ்வரரை வணங்கி போக்கிக்கொண்டான்.

எனவே இறைவன்பிரம்மபுரீஸ்வரர் எனஅழைக்கப்படுகிறார்...
நவக்ரஹங்களும் தங்கள் சாபத்தை நிவர்த்திசெய்து கொண்டன...
இங்கு நவக்ரகங்கள் ஒரே நேர்கோட்டில் இறைவனை எதிநோக்கி அமைந்திருப்பது சிறப்பு.....

சப்த விடங்க தலங்களில் திருக்குவளையும் ஒன்று.


திருக்கோளிலி எனப்படும் இத்தலம் தற்போது திருக்குவளை என அழைக்கப்படுகிறது .....
கோள்களால் ஏற்படும் தோஷங்களை நீக்குவதால் இப்பெயர் பெற்றது .....

இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கம் ..
இத்தகைய பழமையும் புராதன பெருமையும் உடைய திருத்தலங்களை தேடி தேடி சென்று தரிசித்தால் துன்பங்கள் நம்மை அண்டுவதற்கும் அஞ்சும் ......

அன்பர்களே சென்று தரிசனம் செய்யுங்கள் 

திருக்குவளை, திருத்துறைப்பூண்டியிலிருந்து கச்சனம் வழியாக எட்டுக்குடி செல்லும்வழியில்உள்ளது...




Friday, January 6, 2017

உருக்குலைந்த நிலையில் உமையொரு பாகன் திருகோயில்.
அன்பர்களே, தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகில் கோபுராஜபுரம் என்னும் சிற்றூர் உள்ளது.பாபநாசம் ரயில் பாதையை கடந்து ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல இந்த கிராமத்தை அடையலாம் 
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் ஸ்வர்ணபுரீஸ்வரர் என்பதாகும் .இன்று மிகவும் 
உருக்குலைந்த நிலையில் உள்ளது .

தனித்து விளங்கும் இறைவியின் திருகோயில் முற்றிலும் சிதைந்து விட்டதால் எம்பெருமானுடனேயே எழுந்தருள செய்துள்ளார்கள் .

இங்கு அருள்பாலிக்கும் குபேர லிங்கத்தை உள்ளன்புடன் வழிபட, வறுமை நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்
என உறுதியுடன் கூறுகிறார்கள் உள்ளூர் பெருமக்கள் .

பழமையும் பெருமையும் பொருந்திய இத்திருகோயில் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்பதே
அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது 



Thursday, January 5, 2017

காசிக்கு நிகரான காலபைரவ ஷேத்திரம் ......



காசிக்கு நிகரான தலங்கள் , காசிக்கு வீசம் அதிகமான தலங்கள்  என பல தலங்கள் அறியப்பட்டதுண்டு .....

காசியில் இறப்பவர்க்கு எம வாதனை கிடையாது ....ஆனால் பைரவ தண்டனை உண்டு ...
ஆனால் இங்கு வந்து சப்த ரிஷிகள் வழிபட்ட ஞானாம்பிகை சமேத  ரிஷீஸ்வரரை வணங்கினால் , இங்கு உறையும் பைரவரை வழிபாடு செய்தால் இவை இரண்டுமே கிடையாது ....

இதன் மூலம் இத்தலத்தின் பெருமையை அறியலாம்....

அத்தலம் தான் குடந்தை அருகில் மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ள அம்மாசத்திரம் ஆகும் ....

அருகிலேயே திருபுவனம் ,  .திருவிடைமருதூர் போன்ற புகழ் மிக்க தலங்கள் சூழ அமைந்துள்ளது .....

இங்கு கம்பீரமாக வீற்றிருக்கும் கால பைரவ பெருமானுக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது .....அவ்வமையம் திரளான மக்கள் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள் ....

காசியை போலவே  கும்பகோணத்திலும் 8 திக்குகளிலும் 8 விதமான பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர் ....
சப்த ரிஷிகளும் சிவபெருமானுக்கு திருமணம் செய்வித்த தலம் என்பதால் , இது திருமண தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது ....

அன்பர்களே , பிதுர் கடன்களை முறையாக செய்ய தவறியவர்கள் இங்கு வந்து வணங்குவதன் மூலம் அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் ...

இத்தலத்தின் பெருமை பவிஷ்ய புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது ...
மிகவும் சுத்தமாகவும் , நேர்த்தியாகவும் பராமரிக்கப்படும் திருக்கோயில்களில் அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும்..

இத்திருக்கோவிலில் உள்ள காலபைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பது வேறு எங்கும் இல்லாத விசேஷ அம்சமாகும்

திருக்கோவிலின் சிறப்புமிக்க அம்சங்கள்:

• சப்தரிஷிகள் சிவபெருமானுக்கு திருமணம் பேசி முடித்த திருத்தலம்.
• பஞ்சலிங்கங்கள் மற்றும் பஞ்சசக்திகள் அருள்பாலிக்கும் திருத்தலம்
• நவகிரஹ இயந்திர மண்டலம் விளங்குவது ஆகியவை ஒரே கோவிலில் அமைந்திருப்பது என்பது இத்திருத்தலத்தின் சிறப்பு.

 இங்கு இறைவன் அஷ்ட பைரவ ரூபியாக  இருந்து கும்பகோணத்தை காவல் காப்பதாக சம்பிரதாயம் உண்டு.
குடந்தையிலிருந்து 7 கிலோமீட்டரில் உள்ளது இத்தலம் 


இத்தகைய  பெறற்கரிய இத்தலத்தை குடந்தை செல்லும் அன்பர்கள்  தவறாமல் தரிசனம் செய்து பலன் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு ..




















Friday, December 30, 2016


கொரநாட்டு கருப்பூர், குடந்தை.......

ஒருசமயம் காவேரியில் மிதந்து வந்த ஒரு பெட்டியை கிராம மக்கள் கண்டனர். திறந்து பார்த்தபொது மார்பளவே உள்ள ஒருஅம்மன் சிலையை கண்டு அதிசயித்தனர்.
பின்னர் காஞ்சி மகானின் ஆணைகிணங்க இங்குள்ள சுந்தரேஸ்வரர் திருகோயிலில் பெட்டிகாளி பிரதிஷ்டை செய்யப்பட்டாள். அன்று முதல் இப்பகுதியின் காவல் தெய்வமாக பிரசித்திபெற்று விளங்கிவருகிறாள்.
உக்கிரமாக காட்சிஅளித்தாலும் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவள்.
வருடத்திற்கு ஒருமுறைதான் அதுவும் பெட்டியோடுதான் இவள்
ஊர்வலம் காண்கிறாள். அப்போது மிகுந்த உக்கிரத்தோடு காணப்படுவதால் ஒரே ஓட்டமாக எங்கும் நிற்காமல் எடுத்து சென்று
சன்னதியை அடைந்த பின்னரே நிறுத்துகின்றனர்.

வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் பூஜை நடைபெறும் .....அப்போது இவள் தரிசனம் பெறலாம் ...
ராகு கேது தோஷம் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவர்கள் , இங்கு வந்து வழிபட்டு .பலன்  அடைகிறார்கள்  

மூலவர் இறைவன் சுந்தரேஸ்வரர்.....அன்னை அபிராமி

குடந்தை அருகே சென்னை சாலையில்  2 கிலோமீட்டரில் உள்ளது கொரநாட்டு கருப்பூர் 


















Monday, December 19, 2016

விண்மீன்கள் வழிபட்ட வேதநாயகன் 



தாம்பரத்திலிருந்து காஞ்சீபுரம் செல்லும் வழியில் உள்ளது செர்பனஞ்சேரி. இங்கு சாலை ஓரமாகவே உள்ளது இத்திருகோயில்.
27 நட்சத்திரங்களும் வழிபட்ட வீமீஸ்வரரை திங்கள், ஞாயிறு கிழமைகளில் தீபம் ஏற்றி வில்வதளத்தால் அர்ச்சித்து வழிபட மங்களங்கள் உண்டாகும்.

தூங்கானை மாடக் கோயில் வகையில் காஞ்சிக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையில் 18-ம் கோயிலாக இத்தலம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர், செரப்பணஞ்சேரி வீமீஸ்வரர் சிவத் தலங்கள் இரண்டும் ஒரே சிற்பியால் கட்டப்பட்டவை. வீமீஸ்வரர் ஆறடி உயர லிங்கத் திருமேனியாராகக் கோயில் கொண்டுள்ளார். இடப்பாகத்தில் தேவி ஸ்வர்ணம் பிகை தெற்குநோக்கி அருள்கிறார்.



Saturday, December 17, 2016

குன்றாத இளமை பொலிவிற்கு இலம்பையன்கோட்டூர் 


அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர் 631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.

அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை


பூந்தமல்லியிலிருந்து பேருந்து வசதி உள்ளது ....

தக்கோலம் செல்லும் வழியில் நரசிங்கபுரம் நிறுத்தத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் செல்ல வேண்டும் .



Friday, December 9, 2016

சூரியனார்கோயிலில் ஒரு சந்திர தோஷ பரிகார தலம்...........
மக்களால் அறியப்படாத மகத்தான சிவாலயம் 

திருமாந்துறை(சூரியனார்கோயில்) அட்சய நாத சுவாமி திருக்கோயில் , மணலூர் அஞ்சல் 

↝இங்கு வந்து ஸ்ரீ யோகநாயகி சமேத அட்சயநாத ஸ்வாமியை வணங்கிய பின்னரே சூரியனார் கோயில் சென்று வணங்க வேண்டும் என்பது மரபு .
இது இந்த ஆலய வரலாற்றிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது 

↝சந்திரன் தன் க்ஷய (க்ஷயம் என்றால் குறைதல் என்று பொருள்) ரோகம் தீர வணங்கிய தலம் ...

↝ விருச்சிக ராசி காரர்கள் , ரோகினி நட்சத்திரம் கொண்டவர்கள் வணங்க வேண்டிய தலம் 

↝ காலமா முனிவருக்கும் , நவகிரஹங்களும் க்ஷய ரோகம் நீங்குவதற்காக இங்குள்ள அட்சய தீர்த்தத்தில் நீராடி 
அட்சய நாத ஸ்வாமியை வணங்கி , துயர் நீங்கப்பெற்ற தலம் .

↝  அன்னதோஷத்தால் துன்புறுவோர்கள்  ...அதாவது உண்ண  உணவு இருந்தும் சாப்பிட முடியாமல் துன்புறுவார்கள், வறுமை காரணத்தால் உணவின்றி பட்டினி கிடப்பவர்கள் , பெற்றோரை பசியால் 
வாட செய்ததால் ,இறைவனுக்கு படைக்காமல் உண்டதால் ஏற்பட்ட தோஷம் இப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதால் நிவர்த்தியாகும் .....
↝சூரியனுக்கு ஒளி கிரணங்கள் குறைந்தபோது , ஒளி பிரகாசத்தை கொடுத்த தலம் 

↝  இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் அட்சய த்ரிதியை அன்று வணங்குவதால் குபேர சம்பத்து ஏற்படும் .......

↝ அன்று இங்கு ஒன்றல்ல இரண்டல்ல 64 பொருட்களால் பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது .
இதை பிரசாதமாக உண்பதன் மூலம் அனைத்து விதமான உடல் குறைகள் நீங்கும் ...

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோயில் ஆடுதுறை அருகே சூரியனார் கோயில் பின்புறம்(அரை கிலோமீட்டர்)  அமைந்துள்ளது ..
மிக சக்தி வாய்ந்த இந்த திருக்கோயில் பக்தர்களால் அதிகம் அறியப்படாமல் உள்ளது மிகவும் வேதனை ...

சூரியனார் கோயில் வரும் பக்தர்கள் முதலில் அட்சயநாத ஸ்வாமியை வணங்க வேண்டும் .....
ஆனால் இந்த திருக்கோயில் அதிகம் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது ...
அட்சய திருதியை அன்று மட்டும் திருவிழா காண்கிறது இந்த திருக்கோயில் .....

ஆலய அர்ச்சகர் திரு ராஜு சிவம் .....
அலைபேசி எண் :9994032380